புதுக்கோட்டை, டிச.20 - தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு சமையலர் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.மலர்விழி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் அளித்த பேட்டி வருமாறு : மாநிலத்தில் 9 ஆயிரம் சமையலர் உதவியாளர் பணியிடத்தை வெறும் ரூ.3 ஆயிரத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் 24,145 சமையலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் வெறும் 9 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதும் கண்துடைப்பே. தமிழ்நாடு அரசின் மேற்கண்ட நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வருகின்ற திங்கள்கிழமை சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எனவே, தமிழ்நாடு அரசு தற்பொழுது அறிவித்துள்ள 9 ஆயிரம் சமையலர் உதவியாளர் பணியிடங்களை முறையான சிறப்பு காலதுறை ஊதியத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.