tamilnadu

img

செவிலியர் காலிப் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திருச்சி, அக். 26- காலியாக உள்ள செவிலியர் பணி யிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ர மணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 96 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசியும், 92 விழுக்காடு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளோம். 96 விழுக்காடு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். அதனால் கொரோனா இறப்பு கடந்த 6 மாதமாக இல்லை. தமிழகத்தில் கடந்த 10 மாதத்தில் 2 பேர்  மட்டும்தான் டெங்குவால் இறந்துள்ள னர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றார். தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்கு கள் கட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 4,308 காலி பணியிடங்கள்  கண்டறியப்பட்டு செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 1,021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டு மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணி இடங்கள் நிரப்பப்படும் என்றார். தமிழகத்தில் மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை பொறுத்த வரை  இரண்டு தரப்பிலான மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைக்கின்றனர். இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்து பேசி உள்ளோம்,விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன் என்று அமைச்சர் கூறினார். இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.