tamilnadu

img

ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காத கல்லூரி நிர்வாகம்.... டான்சாக் கண்டனம்

மதுரை:
ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்காத மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகத்திற்கு, தமிழ்நாடு அரசு உதவிபெறும் கல்லூரி அலுவலர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மண்டலச் செயலாளர் பா.மனோகரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை நாகமலை, நாடார் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஓர்அரசு உதவிபெறும் கல்லூரி ஆகும். இக்கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவில் 83 பேராசிரியர்களும், 28 அலுவலர்களும் சுயநிதிப் பிரிவில் 82 பேராசிரியர்களும், 88 அலுவலர்களும் ஆக 281 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்றும்,ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்திடாமல் முழு ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவில் பணியாற்றும் 111 ஆசிரியர்கள் - அலுவலர் களுக்கு கடந்த ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஊதியப்பட்டுவாடா அதிகாரியான மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தொடர்ந்து அறிவுறுத்தியும், கல்லூரி நிர்வாகம் ஊதியப்பட்டியலை வேண்டுமென்றே அனுப்பாமல், ஆசிரியர்கள் - அலுவலர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

மேலும் கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் 176 ஆசிரியர் - அலுவலர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்த சொற்ப ஊதியத்தில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஊதியம் வெட்டப்பட்டு, பேராசிரியர்களுக்கு சராசரியாக 60 சதவீதமும் அலுவலர்களுக்கு சராசரியாக 70 சதவீதமும் ஏப்ரல் மாத ஊதியத்தைக் குறைத்து, அதையும் காலதாமதப்படுத்தி கடந்த 7.5.2020 அன்றே வழங்கப் பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 30 நாளும்பணிக்கு வந்து 8 மணி நேரம் என்ற வழக்கத்திற்கு மாறாக 12 மணி நேரம் கட்டாயப் பணியாற்றிய காவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர்களுக்கும் 30 சதவீதம் ஊதியம் வெட்டப்பட்டு 70 சதவீதம் ஊதியமே வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்குதலால் பாதிப்பிற்குள்ளாகி உள்ள இந்தச் சூழ்நிலையில், ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள பணியாளர்களுக்கு ஊதியம்இதுவரை கிடைக்கப் பெறாததாலும், மிகமிகக் குறைந்த ஊதியம் பெற்றுவரும் சுயநிதிப் பிரிவு ஆசிரியர்கள் அலுவலர்களின் ஊதியம் வெட்டப்பட்டதாலும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கே கூட கடும் சிரமத்தில் உள்ளனர்.
மேலும் இந்த மாத ஊதியத்தில் ஒருநாள்ஊதியத்தை தமிழ்நாடு அரசு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஆசிரியர்கள் அலுவலர்கள் இசைவளித்து இருந்தும் இதுவரை ஊதியம் வழங்கப்படாததால், அவர்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம்செய்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சென்றிருக்க வேண்டிய ஒருநாள் ஊதியமும் கூட, முதலமைச்சரின் நிவாரண நிதிக்குச் செல்லாமல் தடைப்பட்டுள்ளது.எனவே, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரும் அரசின் உயர்கல்வித் துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக வழங்கிடவும், சுயநிதிப்பிரிவு ஆசிரியர்கள் அலுவலர்களின் ஊதியத்தில் வெட்டப்பட்டுள்ள ஊதியத்தை உடனடியாக அந்த ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு வழங்கிடவும் ஆவன செய்ய வேண்டும்.

ஏற்கெனவே மாணவர்களிடம் அதிக அளவு கல்விக்கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள கல்லூரி நிர்வாகம், சுயநிதிப்பிரிவு ஆசிரியர்கள் - அலுவலர்களிடமிருந்து வெட்டப்பட்ட ஊதியத்தை வழங்காமலும், உதவி பெறும் பிரிவு ஆசிரியர் அலுவலர்களின் ஊதியப் பட்டியலை அனுப்பாததின் மூலம் அவர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் செய்யும் மாணவர் -ஆசிரியர் - அலுவலர் விரோதப் போக்கைத் தொடருமானால், மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை ஒன்று திரட்டி தொடர் அறப் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;