tamilnadu

img

தேவையோ ரூ.11 ஆயிரம் கோடி.... ஒதுக்கியதோ வெறும் ரூ. 95 கோடி.... தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு.... சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்.....

மதுரை:
மத்திய பாஜக அரசால் தமிழகத்தின்  ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய பட்ஜெட்டை தொடர்ந்துரயில்வேயின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிங்க் புக் வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் 11 புதிய லைன்திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்போது வெறும் 95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் ரூ. 208கோடி தேவைப்படுகிற இராமேஸ்வரம் -தனுஷ்கோடி திட்டத்துக்கு 75கோடியும்,மதுரை, அருப்புக்கோட்டைவழியாக தூத்துக்குடிக்கான புதியபாதை திட்டத்தின் ரூ. 1800 கோடிக்கு வெறும் 20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு -புத்தூர்; ஈரோடு -பழனி ;சென்னை- மகாபலிபுரம்- கடலூர்; கூடுவாஞ்சேரி- திருப்பெரும்புதூர்; மொரப்பூர்- தர்மபுரி;காரைக்கால் -பேரளம்; சின்னசேலம்- கள்ளக்குறிச்சி ; தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகிற பத்தாயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இதேபோல புதியதிட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது .நான் அதனை வன்மையாக கண்டித்தேன். அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரையும் சந்தித்தேன் .ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. சென்ற ஆண்டு நான் இதை விமர்சித்த போது ரயில்வே நிர்வாகம் தாங்கள் காட்பாடி - விழுப்புரம்; கரூர் -சேலம்- திண்டுக்கல்; கரூர்- ஈரோடு; சென்னை கடற்கரை-எழும்பூர் ஆகியஇரட்டை பாதை திட்டங்கள் மின் மயத்துடன் கூடியதாக இந்த பட்ஜெட்டில் இணைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அந்த நாலுதிட்டத்துக்கும் கூட தலா வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கி இருப்பதை அப்போது சுட்டிக் காட்டினேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் இந்த நான்கு திட்டங்களில் காட்பாடி விழுப்புரம் திட்டத்துக்கு ரூ. 1600 கோடி தேவை. ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். கரூர்- சேலம்- திண்டுக்கல் திட்டத்துக்கு ரூ. 1,600 கோடி தேவை .ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய் .கரூர்- ஈரோடு திட்டத்துக்கு தேவை ரூ.650 கோடி. ஒதுக்கி இருப்பது வெறும் ஆயிரம் ரூபாய். பீச் திட்டத்துக்கு 4.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 779 கோடி ரூபாய்க்கு 5 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தத்திட்டங்கள் நடைமுறையில் கிடப்பில்போடப்பட்ட திட்டங்களாக மாறியுள்ளன.

தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி மின் மயத்துடன்  கூடிய இரட்டைப் பாதைதிட்டம். அதைப்போல வாஞ்சி மணியாச்சியிலிருந்து நாகர்கோவில்;அதைப்போல திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு என்று மூன்று திட்டங்களுக்கும் மீதி ரூ.3000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் வெறும் 775 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்  2017ல் அறிவித்தபோது 2022ல்
முடியும் என்று  மத்திய அமைச்சரவைகூறியது. ஆனால் இப்போதைய நிலைமையில் 2025ல் கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலை உள்ளது. மத்திய பட்ஜெட் தமிழகத்தின் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. மத்தியஅரசு மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்ததிட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறேன்

;