“இந்துக்கள் இந்த மூவர்ணக் கொடியை ஒருபோதும் மதிக்கமாட்டார்கள். இது இந்துக் களின் கொடி அல்ல. மூன்று நிறமுள்ள ஒரு கொடி மானசீக மாக நாட்டுக்கு மோசமான அனுபவத்தையே தரும். இது நாட்டைப் பொறுத்தவரை ஆபத்தானதாகும்’’. - அரசியல் நிர்ணய சபை தேசியக் கொடியை அங்கீகரித்ததைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்-ஸின் அதிகாரப்பூர்வப் பத்திரிகை யாகிய ஆர்கனைசர் தனது நிலைப்பாட்டை இவ்வாறு தெரிவித்தது. இதே அணுகுமுறையையே ‘விசாரதார’ நூலில் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் முன்வைத்திருந்தார்.
நேரு முன்மொழிந்த தீர்மானம்
தேபோன்ற சில சிந்தனைகள் பிரதிபலித்தபோதிலும் அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. தேசியக் கொடி சம்பந்தமான தீர்மானத்தை ஜவகர்லால் நேரு முன்வைத்தார். தேச சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றையும் நிகழ்காலத்தையும் விவரித்தவாறு நேரு, கொடி சம்பந்தமான தீர்மானத்தை முன்வைத்தார். எச்.வி.காமத் ஒரு திருத்தத்திற்கு நோட்டீஸ் தந்திருந்தார். ஸ்வஸ்திக் சின்னமும் தேசியக் கொடியில் இருக்க வேண்டு மென்பதாக அவரது திருத்தம் இருந்தது. ஸ்வஸ்திக் என்பது ஹிட்லர் கொடியின் அடையாளம் என்பது எச்.வி. காமத்தின் மனதை உறுத்தவில்லை. இந்தியப் புராணத்தின் அடை யாளம் தேசியக் கொடியில் இருப்பது நன்றாக இருக்கு மென்பது அவரது கருத்து. ஆனால், கொடியின் வடி வமைப்பைப் பார்த்த பிறகு ஸ்வஸ்திக்கை கொடியில் சேர்க்க இடமில்லை என்பதை அவரே அறிந்து தமது திருத்தத்தைச் சபையின் அனுமதியுடன் திரும்பப் பெற்றுக் கொண்டார். 1921-இல் காங்கிரஸ் அங்கீகரித்த சிவப்பு-பச்சை-வெள்ளை வண்ணங்கள் உள்ள ஒரு கொடியில் சிவப்பு என்பது இந்துவையும், பச்சை என்பது இஸ்லாமையும், வெள்ளை மற்ற சிறுபான்மை மதப்பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தின.
ஆதிவாசிகளின் குரல்
விவாதங்களில் எழுந்த ஒரு கருத்து, தேசியக் கொடி என்பது ஆரியக் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத பகுதி என்ப தாக இருந்தது. ஆனால் அதற்கு ஜெய்பால்சிங் இவ்வாறு பதிலளித்தார்: ‘‘நான் மூன்று கோடிக்கு மேலான ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறேன். நாங்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கொடி உயர்த்த வேண்டுமென்று சில உறுப்பினர்கள் ஆலோசனை கூறினர். ஆனால், முதன் முதலாகக் கொடி உயர்த்தியவர்களும், சொந்தக் கொடிக் காகப் போராடியவர்களும் ஆதிவாசிகள்தான். பீகாரின் வரலாற்றினூடே பயணப்படுகிறவர்கள் இதை அறி வார்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் அவர்களுக்கே உரிய கொடி இருந்தது. யாராவது கொடிக்குச் சவால் விட்டால் கொடியைப் பாதுகாக்க கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை போராடுவார்கள்’’.
மதங்களின் நிறமா?
விவாதங்களில் எழுந்த ஒரு பிரச்சனை தேசியக் கொடியின் நிறங்கள் மதங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனவா என்பதாக இருந்தது. அதற்குக் காரணம் 1921-ல் காங்கிரஸ் அங்கீகரித்த சிவப்பும் பச்சையும் வெள்ளையும் கொண்ட ஒரு கொடியில் சிவப்பு இந்துவை யும், பச்சை இஸ்லாமையும், வெள்ளை மற்ற சிறுபான்மை மதப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவனவாகும். பிறகு 1931-ல் கொடியில் மாற்றம் ஏற்படுத்தினாலும் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்ட கட்டத்தில் இந்தச் சந்தேகம் மீண்டும் எழுந்தது. சேத் கோவிந்ததாஸின் வாதம் இது சம்பந்தமாக சில புதிய கண்ணோட்டங்களை முன்வைத்தது: ‘‘புராதன காலம் முதல் காவி நிறம் இந்துக்களுக்கு உரியது என்று யார் சொன்னது? பேஷ்வாக்களின் காலத்தில் காவி அவர் களது கொடியின் நிறமாக்கப்பட்டிருந்தது. அதேசமயம் பின்னோக்கிச் சென்று பாருங்கள். மகாபாரதத்தில் அர்ஜுனன் ரதத்தின் கொடிக்குக் காவி நிறமில்லை. கொடியில் அனுமன் படம்தான் அடையாளமாக இருந்தது. கர்ணன் ரதத்தின் கொடியைப் பார்த்தால் அதிலும் காவி நிறமில்லை. கொடியில் யானை படம்தான் அதன் அடை யாளமாக இருந்தது. அதனால்தான், ஏதாவது ஒரு நிறத்தைப் புராதன இந்துவுக்கு உரியது என்று கூறுகிற வாதம் வரலாற்று ரீதியாகவே தவறானதாகும்’’ என்றார்.
அவர் மற்றொரு வாதத்தையும் மறுத்து அம்பலப் படுத்தினார். இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலச் சூழலில் பச்சையும் ஒரு மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றார். ‘‘1857-ல் முதலாவது சுதந்திரப் போராட்டக் கொடியின் நிறம் பச்சையாக இருந்தது. ஜான்ஸிராணியும், நானாசாகிபும், தாந்தியா தோபேயும் நடத்திய போராட்டத்தின் இறுதியில் பகதூர்ஷா உயர்த்தியதும் பச்சை வண்ணக் கொடிதான். அது இந்துவுக்கும் முஸ்லிம் களுக்கும் மட்டுமல்ல, போராட்டத்தில் பங்கேற்ற அனை வருக்கும் உரியதாகவும் இருந்தது’’ என்றார். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அதற்கு விரிவான விளக்கம் அளித்தார். ‘‘குங்குமம் நிறம் தியாகத்தையும், நடுநிலையையும் குறிக்கிறது; வெள்ளை நிறம் நமது செயலை சத்தியத்தின் பாதையில் இட்டுச்செல்கிற வெளிச்சத்தைக் குறிக்கிறது; பச்சை நிறம் நமது வாழ்க்கை யை நிலைநிறுத்துகிற இயற்கையையும், பூமியில் உள்ள செடி, கொடி, மரங்கள் முதலானவற்றுடன் உள்ள பந்தத்தையும் குறிக்கிறது’’ என்றார். அரசியல் நிர்ணய சபை ஒருமனதாகக் கொடியை முடிவுசெய்து தீர்மானம் நிறைவேற்றியது.
மொழியில் ஏற்பட்ட முரண்பாடு
ஆனால் மொழி விஷயத்தில் இந்த ஒற்றுமை யெல்லாம் சீர்குலைக்கப்பட்டது. முரண்பட்ட பல்வேறு கருத்துக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என சபை பிளவுபட்டது. மத-கலாச்சார வேற்றுமைகள் மோதிக் கொண்டன. இங்கும் இந்து, இந்தி, இந்துஸ்தான் என்ற முழக்கங்கள் சில உறுப்பினர் களிடமிருந்து எழுந்தன. ஆர்.வி.துலேகர் மதவெறியைத் தீப்பொறியாய்த் தன் வாதத்தில் கிளப்பினார். சமஸ்கிருதம் சர்வதேச மொழி என்றும், இந்தி தேசிய மொழி என்றும் அவர் வாதிட்டார். இந்தி எப்போது தேசிய மொழியாக ஆனது என்று ஒரு உறுப்பினர் கேட்டபோது அவர் ஆவேசத்துடன் பொறிந்தார். ‘‘என் நாட்டின் மொழி இந்தி. நீங்கள் வேறு ஏதாவது நாட்டைச் சேர்ந்தவ ராக இருக்கலாம். நான் இந்தியன். இந்தி பேசத் தெரி யாதவர்களுக்கு இந்தியாவில் வசிக்க உரிமையில்லை’’ என்றார். இன்று பாஜக எழுப்புகிற தேசியமொழிவாதங் களை அன்றே அவர்கள் எழுப்பினார்கள் என்பதே இதன் அர்த்தம். ‘‘சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாகத் தகுதிபெறும் காலம்வரை இந்திக்கு முக்கியத்துவம் வழங்கியே ஆகவேண்டும்’’ என்று கோல்வால்கர் தனது ‘விசாரதார’யில் அழுத்த மாகக் கூறினார். பண்டிட் லட்சுமிகாந்த் மிஸ்ரா, சமஸ்கிருதம்தான் தேசிய மொழியாக ஆகவேண்டும் என்ற நிலைபாட்டையே அரசியல் நிர்ணய சபையில் தெரிவித்தார். ஆனால், தென்னிந்தியாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக வலுவான நிலைபாட்டை மேற்கொண்டனர். அவர்கள் மட்டுமல்ல, மற்ற பல மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் இதே நிலைபாட்டையே பின்பற்றினர். உலகில் மிகவும் வளமான, வரலாற்றுச் சிறப்புமிக்க, பல பல்கலைக்கழ கங்களும் கற்றுத் தருகிற வங்காளி மொழியைத் தேசிய மொழியாக ஆக்கவேண்டுமென்று சதீஷ் மிஸ்ரா கூறினார்.
நாள்கணக்கில் நீண்ட விவாதங்களுக்கிடையே எந்தவொரு மொழியையும் தேசிய மொழியாக்க அரசியல் நிர்ணய சபை முடிவுசெய்யவில்லை. ஆங்கிலத்துடன் இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக நிச்சயிக்கப்பட்டது. 15 ஆண்டு களுக்கு ஆங்கிலம் அதிகாரப்பூர்வ மொழியாக நீடிப்ப தெனத் தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய மற்றும் மாநிலங் களுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்களுக்கும், நீதி மன்ற விவகாரங்களுக்கும் ஆங்கிலம்தான் தொடர வேண்டுமென நிச்சயிக்கப்பட்டது. எட்டாவது அட்டவணை யில் உள்ள மொழிகளுக்கும் அதிகாரப்பூர்வ அந்தஸ்து கிடைத்தது. தேசிய மொழி என்பது ஒரு நாட்டின் வரலாற்றை யும், கலாச்சாரத் தொன்மையையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வ மொழி என்பது ஒன்றிய அரசின், மாநில அரசின் ஆதிகாரப்பூர்வ நட வடிக்கைகளுக்கான மொழியாகும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்களுக்கான முயற்சி இருந்தாலும் எதிர்ப்பு களைத் தொடர்ந்து அதை நடைமுறைப்படுத்துவது இய லாது; இந்தி பேசாத மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிற வரை இந்தி ஆங்கிலத்துக்குப் பதிலாக்கப்படாது என்று ஜவகர்லால் நேரு உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து தான் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டமும் நிறைவேறியது. இந்தியைத் திணிப்பதற்கு வரலாற்றைச் சிலர் தவறாக வியாக்கியானம் செய்ய முயற்சிக்கும்போது இந்த விவாதங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டாகும்.
- தமிழில்: தி.வரதராசன்