நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய அளவிடும் கருவி
நாகர்கோவில். ஜூன் 10- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள், கட்டிடங்கள் மற்றும் எல்லையை அளவீடு செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவீடு பணி துல்லியமாக தெரியும் வகையில் ட்ரோன் மூலம் செய்யப்படுகிறது. இதற்கான மாதிரி அளவீடு பணியை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மேயர் ரெ.மகேஷ் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் ரகுராம், மாமன்ற உறுப்பினர் கலாராணி, அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நாகர்கோவில். ஜூன்.10- குமரி மாவட்டத்தை சேர்ந்த போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மார்த்தாண்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேரளபுரம் கொண்ணைவிளாகம் பகுதியை சேர்ந்த பாபு மகன் சக்திவேல் (எ)விஜய் (27) என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி குற்றவாளி சக்திவேல் (எ) விஜய் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
மிகவும் அரிதான போதைப் பொருள் வைத்திருந்த வழக்கறிஞர் கைது
நாகர்கோவில்,ஜூன் 10- கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (25). அரிதான உயர்ரக போதைப் பொருட்களான மெத்தம்பேட்டமைன் 12.08 கிராம், எல்எஸ்டி ஸ்டாம்ப் - 0.42 மில்லி கிராம் ஆகியவை வழக்கறிஞரான சக்திவேலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவரை கோட்டார் காவல்துறையினர் கைது செய்தனர். குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.