புதிய ருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும் எம்ஆர்பி செவிலியர் சங்கம் வலியுறுத்தல்
புதிய மருத்துவமனைகளில் நிரந்தரத் தன்மையுள்ள செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டுச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் நே.சுபீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. நிரந்தரத் தன்மையுள்ள செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்காமல், மாற்று பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணியமர்த்தி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரை மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயங்களின்படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் இல்லை. தமிழகத்தில் 13 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் செயல்பட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகள் அரசின் மருத்துவ சேவையை நிரந்தர தன்மையற்றதாக மாற்றும் அபாயம் உள்ளது. எனவே புதிய மருத்துவமனைகளை தொடங்கும்போது, நிரந்தரத் தன்மையுடைய பணியிடங்களை உருவாக்க வேண்டும். 8 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து அவற்றை நிரப்ப வேண்டும். அரசாணை 45-ஐ மறுபரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.