அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கஞ்சமலைப்பட்டி பழங்குடியின மக்களுக்கு நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு முயற்சி மேற்கொண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இதனால் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், ஆண்டிமடம் வட்டச் செயலாளர் வி.பரமசிவம், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன், செந்துறை வட்டக் குழு உறுப்பினர் செண்பகவல்லி ஆகியோர் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, பழங்குடியின மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்ததின் பேரில், கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து கட்சியில் இணைந்த அனைவருக்கும், தலைவர்கள் செந்நிற கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்தனர். இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுத்து, அதிலும் வெற்றி கண்டதால், மார்க்சிஸ்ட் கட்சியின் மீது நம்பிக்கை கொண்ட மாவட்டம் முழுவதும் உள்ள பலர் தற்போது கட்சியில் இணைந்து வருகின்றனர் என்றார்.