tamilnadu

img

‘ரோடு ஷோ’ எனும் சாலையோர காட்சிகள்

முன்பெல்லாம்
நம்மூரில் ‘டாக் ஷோ’ எனும்     
நாய்க் கண்காட்சி நடத்துவார்கள் 
எஜமானர்களால் பயிற்றுவிக்கப்பட்ட 
விதவிதமான நாய்கள் 
திறமைகளைக் காட்டி 
பரிசு பெறும்
இவர்கள் ரோடு ஷோ
நடத்துகிறார்கள் 
தெருத்தெருவாய் நிறுத்தி 
வைத்து சுற்றுகிறார்கள் 
தேர்தல் பத்திரங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 
ஊழல் பணத்தை     தெருக்கள்தோறும் 
வாரி இறைத்து 
வித்தை     காட்டுகிறார்கள்
பார்க்க பரிதாபமாக     இருந்தது.
என்ன இருந்தாலும்
மாமன்னராச்சே. 

மனக்குரங்கு
என்னனென்னவோ
காட்சிகளை
காணத் துவங்கி விட்டது.
கயிற்றில் ஆடும் கழைக்கூத்தாடிகளும்
சைக்கிள் ஒட்டிக் கொண்டே யாசகம்     கேட்போரும்
குரளி வித்தைக்காரரும்
பூம்பூம் மாட்டுக்காரரெல்லாம் ஏனோ நினைவில் வந்து போனார்கள்.
சாய்பாபா படத்தை வைத்து 
வீதியை சுற்றி வந்து யாசகம் 
கேட்போரும் பெருகி விட்டார்கள் அதை     ஒத்திருந்தது இது. 

ஆகாயப்போர் 
விமானங்களில் பறக்கிறார்;
கடலுக்கடியில் 
மயிலிறகுடன் தியானிக்கிறார்;
மலைவாழ் மக்களுடன் 
பூக்களை சொருகிக் கொண்டு 
மத்தளம் இசைக்கிறார்; 
வாய்ப்பிருக்கும் நேரங்களில் 
நடிகைகளுடன் நடனமாடி களிக்கிறார்.

ஒரு நாடே நகைக்கும் படி 
எந்தக் கூச்சமுமின்றி
சர்க்கஸ் கோமாளியினும் கீழாக 
என்னென்னவோ வித்தைகள் செய்து 
பல்டியடித்துத்தான் பார்க்கிறார்
ஆனால் 
மக்கள் மனக்கண்ணாடியில் 
பிரதிபலிப்பதெல்லாம்
வாழ்க்கையில் வரிகளால்
மண்ணள்ளிப் போட்டுவிட்டு 
கூச்சமே இல்லாமல் 
வாயெல்லாம் பல்லாக 
கைகூப்பி வாக்குப் பிச்சைக்காக 
வெட்கமற்று திரிகிறாரே 
என்பதாகத்தானே இருக்கும் 

மூணு சீட்டு கேடிகளுக்கும் 
ரோடு ஷோ நாயகர்களுக்கும்
வித்தியாசமொன்றும்
பெரிதில்லைதான்...

செ. தமிழ்ராஜ், வண்டியூர், மதுரை