tamilnadu

img

“மேட்டூர் அணையை பாசனத்துக்காக ஜூன் முதல் வாரத்திலேயே திறக்க வேண்டும்”

தஞ்சாவூர், ஏப்.28-  மேட்டூர் அணையை காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் முதல் வாரத்திலேயே திறக்க வேண்டும் என மூத்த வேளாண் வல்லுநர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரையை வழங்கியுள்ளது. தஞ்சாவூரில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த வேளாண் வல்லுநர் குழுவினர் தலைவரும், முன்னாள் வேளாண் உதவி இயக்குநருமான பி.கலைவாணன், விவசாயிகளிடம் குறுவை, சம்பா சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் மூத்த வேளாண் வல்லுநர்கள் குழு அரசுக்கு பரிந்துரை வழங்கி வருகிறது. இந்த குழுவில் வேளாண்மைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். மேட்டூர் அணையில் தற்போது 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் பருவமழையின் மூலமும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் வரவேண்டிய தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தாண்டு குறுவை, சம்பா பருவத்துக்கு 232 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதியில் சுமார் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவையும், சம்பாவில் 8.90 லட்சம் ஏக்கரிலும், தாளடியில் 4.41 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யலாம். குறுவை சாகுபடியை பொறுத்தவரை மே மாதம் முதல் ஜூன் மாதம் இறுதிக்குள் நடவுப்பணிகளை முடித்துவிட வேண்டும். இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை விவசாயிகள் உடன் தொடங்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் மும்முனை மின்சாரத்தை அரசு தடையில்லாமல் வழங்க வேண்டும்.

ஜூலை மாதம், ஆகஸ்ட் மாதங்களில் நடவுப் பணிகளை தொடங்கினால் அறுவடை காலத்தில் மழையில் சேதமாக வாய்ப்புள்ளது. அக்டோபர் முதல் நவம்பர் வரை கன மழை இருக்கும் என்பதால் அதற்கேற்ற வகையில் விவசாயிகள் செயல்பட வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது போதிய அளவு நீர் இருப்பு உள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழையும் இயல்பான அளவு பெய்ய வாய்ப்புள்ளதால் ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக, ஜூன் முதல் வாரத்திலேயே பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீரை தமிழக அரசு திறந்துவிட வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும். அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சி,டி பிரிவு வாய்க்கால்களை பாசனதாரர்கள் சங்கம் மூலம் பராமரிப்பு செய்திட வேண்டும். பருவமழைக் காலங்களில் டெல்டாவில் மழை பெய்யத் தொடங்கியுடன் மேட்டூர் அணையை மூட வேண்டும். மழை பெய்தவுடன் அணையை மூடினால் தண்ணீர் வீணாக வாய்ப்புள்ளது. எனவே சிக்கனமான நீர்பாசனத்தை மேற்கொள்ள விவசாயிகளும், அதிகாரிகளும் முன் வர வேண்டும்’’ என்றார்.