tamilnadu

பாடகி இசைவாணிக்கு மிரட்டல் விடுப்பதா?

சென்னை,நவ.29- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவது குறித்து பாடல் பாடிய இசைவாணிக்கு இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்திருப்பதையும், சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவதையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.  இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில்  ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடையில்லை என்று உச்சநீதிமன்றம் 2018 இல் தீர்ப்பு வழங்கியது. இந்த பின்னணியில் பாடகி இசைவாணி இது குறித்து  5 ஆண்டுகளுக்கு முன்பு  ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு ஆதரவு தெரிவித்து காஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் குழு இயற்றி இசை அமைத்த ஒரு பாடல் பாடியிருந்தார்.  இதில் எந்த இடத்திலும் ஐயப்பனை அவமதிக்கும் வார்த்தைகள் இல்லை.  இந்தப் பாடல் எந்த மத உணர்வுகளையும் புண்படுத்துவதாக அமையவில்லை. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விருப்பமில்லாத  பெண்களை கட்டாயப்படுத்துவதாகவும் எந்த வரியும் இல்லை. கோயிலுக்கு செல்ல விருப்பப்படும் பெண்களின் உரிமையை வெளிப்படுத்துவதாகவே இந்த பாடல் அமைந்திருந்தது.   தற்போது இந்துத்துவ அமைப்புகள் இப்பாடலை  சர்ச்சையாக்கி பாடகி இசைவாணிக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.  முன்னேறிய ஒரு சமூகத்தில் உரிமைக்கான குரல்கள் பல்வேறு தளங்களில் இருந்து வருவதை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானப் பூர்வமாக விவாதிப்பதே சமூகத்தை மேம்படுத்திட உதவிடும். அதைத் தவிர்த்து கருத்தே சொல்லக்கூடாது என்று  அடக்கு முறையை ஏவுவதை அனுமதிக்க முடியாது.   பொதுவாக தமிழகத்தில் இத்தகைய கருத்து மோதல்கள் வருகிற போது கருத்தும் கருத்தும் மோதுவதை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையை அவமதிப்பது, பெண் என்றால் மிக மோசமாக அவதூறு பரப்புவது, ஆபாசமாக பதிவிடுவது என்பது தொடர்ந்து வருவதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இசைவாணி குறித்து சமூக வலைதளங்களில் மோசமாக பதிவிடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.  சமூக நீதி, பெண்ணுரிமை கருத்துக்களை வலுவாக்க, கலை இலக்கிய தளங்களில் முற்போக்காளர்கள் தங்களது கருத்துக்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் இசைவாணியுடன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.