tamilnadu

img

டிஜிட்டல் வடிவில் ‘மார்க்சிஸ்ட்’ இதழ்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழுவின் தத்துவார்த்த ஏடான ‘மார்க்சிஸ்ட்’  ஏட்டின் பழைய இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் பணி வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. தற்போது மார்க்சிஸ்ட் இதழ்களின்  டிஜிட்டல் வடிவத்தை https://www.jstor.org/site/saoa/ என்ற இணையதளத்தில் காணலாம். இது முற்றிலும் பொதுவான திறந்தவெளி தளம் ஆகும்.  தெற்காசிய திறந்தவெளி மின்னணு காப்பகம் என்ற அமைப்பு உலகளாவிய முறையில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் தெற்காசிய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள ஏடுகள்,  நூல்கள், செய்தித் தாள்கள், கணக்கெடுப்பு தரவுகள் உள்ளிட்ட எண்ணற்ற ஆவணங்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பு, ஜேஎஸ்டிஓஆர் (JSTOR) எனும் இணைய நிறுவனத்துடன் கூட்டு மேற்கொண்டு, உலகளாவிய வாசகர்களுக்கு மேற்கண்ட பல்வேறு துறைகளின் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் (பிடிஎப் உள்ளிட்ட வடிவங்களில்) முற்றிலும் இலவசமான முறையில் அளிக்கும் மகத்தான பணியை செய்து வருகிறது. 

தமிழகத்தில், மேற்கண்ட அமைப்புகளுடன் கூட்டாண்மை மேற்கொண்டு சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கும் மாபெரும் பணியை மேற்கொண்டுள்ளது.  ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உதவியுடன், 2021 வரையிலான மார்க்சி ஸ்ட் ஏட்டின் அனைத்து இதழ்களும் (390 இதழ்கள்) டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டு 

https://www.jstor.org/site/south-asia-open-archives/saoa/mrkcis-33856030/?so=old 

என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் ஏடுகளை வாசிக்கவும், அதில் வெளியாகியுள்ள  - இந்திய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல், தத்துவம் சார்ந்த மிகச்சிறந்த கட்டுரைகளையும் அதன் கருத்துக்களையும் ஆய்வு செய்யவும் விரும்பும் அனைவரும் இந்த இணைய முகவரியில் மார்க்சிஸ்ட் இதழ்களை பெற முடியும். ஏற்கெனவே ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் தீக்கதிர் நாளிதழின் முதல் இதழான 1963 ஜுன் 29 இதழ் தொடங்கி 1977 வரையிலான இதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் செயல் படும் கருவூலத்தின் மூலமாக இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன என்று கட்சியின் மாநிலக்குழு அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.