சிதம்பரம் இரவிச்சந்திரன்
சில மனிதர்கள் கொசுக்களைக் கவரும் காந்தங்களாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் காந்தங்களாக செயல்படுகிறார்கள் என்று அந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. இவர்கள் கொசுக்களைக் கவரும் வேதிப்பொருட்களை மற்றவர்களைக் காட்டிலும் அதிக அளவில் தோலில் சுரப்பதால் கொசுக்கள் இவர்களைத் தேடிவந்து கடிக்கிறது. இவர்கள் தோலில் கொசுக்களைக் கவரும் சில வகை அமிலங்கள் சுரக்கின்றன. இந்த ரசாயனப்பொருட்களை வாசனை பிடித்து நுகர்வதற்கேற்ப மனிதர்களைக் கொசுக்கள் கடிக் கின்றன. இதில் கெட்ட செய்தி இவ்வாறு கொசுக்கடிக்கு அதிகம் ஆளாகுபவர்கள் நீண்ட காலம் அந்த உயிரினங்களுக்கு விருப்பமானவர்களாக இருக்கிறார்கள். உங்கள் தோலில் இத்தகைய பொருட்கள் சுரக்கும்வரை நீங்கள் கொசுக்கள் பிக்னிக் வரும் நிரந்தர இடமாக இருப்பீர்கள் என்று ஆய்வுக்கட்டுரை யின் ஆசிரியர் மற்றும் நியூயார்க் ராக்ஃபெலர் (Rockefeller) பல்கலைக் கழக நரம்பியல் நிபுணர் லெஸ்லி வாஸ்ஷால் (Leslie Vossshall) கூறுகிறார். கொசுக்கடியைப் பற்றி பல நாட்டுப்புறக் கதைகள் பல நாடுகளிலும் இருக்கின்றன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட வர்கள் தோல் வாசனையை நுகரும்படி செய்யப்பட்டனர். வாசனை நுகர்வை அடிப்படையாகக் கொண்டே ஆய்வுகள் நடந்தன என்று மற்றொரு ஆய்வாளர் மரியா எலினா டி ஒபால்டியா (Maria Elena De Obaldia) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை செல் (Cell) என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து 64 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
இவர்களுடைய முன்னங்கையில் நைலான் வலைகள் கட்டப்பட்டு தோலில் இருந்து வரும் வாசனைகள் பிடிக்கப் பட்டன. இவை ஒரு நீண்ட குழாயின் இறுதிப்பகுதியில் பொறிகளில் பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பட்டன. பிறகு டஜன்கணக்கிலான கொசுக்கள் இந்த குழாய்க்குள் திறந்து விடப்பட்டன. அவை அவற்றிற்கு பிடித்தமான அதிக ஈர்ப்பு சக்தியுடைய வாசனையை நோக்கி இயல்பாக நீந்திச் சென்றன. கொசுக்களின் தேர்வுப் போட்டியில் கடைசியாக வந்தவரின் தோலில் இருந்து சுரந்த வாசனையை விட நூறு மடங்கு அதிக வாசனையுடைய இடத்தை நோக்கியே கொசுக்கள் அதிகமாக சென்றன. இந்த ஆய்வில் மஞ்சள் காய்ச்சல், சிக்கா வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு நோயைப் பரப்பக் காரணமாக இருக்கும் ஏடிஸ் எஜிப்தி (Aedes Aegypti) கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக இடைவெளிவிட்டு செய்யப்பட்டபோதும் அதிக வாசனை சுரப்புள்ள நபர்களையே கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது என்று ப்ளோரிடா பந்நாட்டு பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் மாட் டெஜெனரோ (Matt DeGennaro) கூறுகிறார். இதனால் கொசுக்கடிக்கு ஆளாபவர்கள் தொடர்ந்தும் அதனால் அவதிப்பட நேரிடுகிறது. கடிபடுபவர்களின் தோலில் சுரக்கும் வழவழப்பான தன்மையுடைய மூலக்கூறுகளைக் கொண்ட அமிலங்கள் அதன் மேல் அடுக்கில் தோலை ஈரமாக வைத்திருக்க இயற்கையாக சுரக்கிறது. இப்பொருட்கள் வெவ்வேறு அளவுகளில் சுரக்கப்படுகின்றன. தோலில் வாழும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இந்த அமிலங்களின் பகுதியை உண்டு மனிதத்தோலில் இருந்து வரும் வாசனைக்குக் காரணமாக அமைகின்றன.
தோலின் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இப்பொருட்களின் சுரப்பை நிறுத்த முடியாது என்று ஹோவோர்டு ஹியூஸ் (Howard Hughes) மருத்துவ நிறுவனத்தில் தலைமை விஞ்ஞானியாகவும் பணிபுரியும் லெஸ்லி கூறுகிறார். அசோசியேட்டட் ப்ரஸ் (A P) அமைப்பின் சுகாதாரம் மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்கு நிதி வழங்கும் இந்த நிறுவனமே இந்த ஆய்வுகளுக்கும் நிதியுதவி செய்தது. தோல் பாக்டீரியாக்களின் அமைப்பை மாற்றி இதற்கு தீர்வு காணமுடியும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழக நரம்பியல் ஆய்வாளர் ஜெஃப் ரிஃபல் (Jeff Riffell) கூறுகிறார். பரிணாம வளர்ச்சியில் மனிதர்களைக் கடிக்கும் திறனை அவை இயற்கையாகவே பெற்றுள்ளன என்பதால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழிகளைக் கண்டுபிடிப்பது கடினமாகவே உள்ளது எண்று அவர் கூறுகிறார். கொசுக்களின் மனிதத் தோல் வாசனையை நுகரும் பண்பிற்கு காரணமாக இருக்கும் மரபணுக்களைச் சேதப்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதேமனிதர்களையே அவை மீண்டும் மீண்டும் கடித்தன என்று லெஸ்லி கூறுகிறார். கொசுக்கள் மாற்றங்களை சமாளிக்கக்கூடியவை. அதனால் அவை நம்மை கடிக்க புதிய புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுகின்றன. மீண்டும் மீண்டும் நம்மையே தேடி வந்து கடிக்கின்றன. இதனால் இதற்கு நிரந்தரத்தீர்வு அவை வளர்ந்து பெருகாமல் இருக்குமாறு நாம் இருக்கும் இடங்களை மாற்றிக்கொள்வதே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.