tamilnadu

img

மதுரை: சு.வெங்கடேசன் எம்.பி குறித்து அவதூறு! - பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி காவல்துறையிடம் புகார்

மதுரை, ஜூன் 12-  மார்க்சிஸ்ட் கட்சி மீதும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்தி பரப்பும் பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை ஆணையாளரிடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் பொய் செய்தியை தனது டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பி வருகிறார்.

அச்செய்தியில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12ஆவது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொல்லியுள்ளார். அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும். சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தை சார்ந்தவர் எனவும் பதிவிட்டுள்ளார். இதனால் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும். அச்சமும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாத போது வதந்தியை கிளப்பி, சமூக பதட்டத்தை ஏற்படுத்தி சாதி ரீதியான மோதலை தூண்டுவதோடு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பரப்பி வரும் எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.