tamilnadu

img

‘மதவெறித் தத்துவங்களோடு யுத்தம் நடத்தும் அருணன்’

மதுரை, மார்ச் 11- பேராசிரியர் அருணன் மனிதர்களோடு யுத்தம் நடத்தவில்லை. தத்துவங்களோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் புகழாரம் சூட்டினார். பேராசிரியர் அருணன் எழுதிய ஞானக் கோலங்கள்-200 கவிதை நூல் வெளியீட்டுவிழா வெள்ளியன்று மதுரையில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு செம்மலர் ஆசிரிய ரும் எழுத்தாளருமான ச.தமிழ்செல்வன் பேசுகையில், எல்லோரும் கவிதையிலிருந்து நாவலுக்கு செல்வார்கள். அருணன் நாவலிலி ருந்து கவிதைக்கு வந்து எதிர்சேவை புரிந்துள் ளார். அரசியல், வரலாறு, தத்துவத்தின் பிழிசாறு மட்டுமல்ல, வாழ்க்கை அனுபவத்தின் சாரம் தான் ஞானக்கோலங்கள். கடவுள் குறித்தும்  அருணன் கவிதை வடித்துள்ளார். பிரச்சனை யும், பிரச்சாரமும் இருக்கும் வரை கடவுள் இருப்பார். ஆனால், அவர் இல்லையென்பதை நாசூக்காக சொல்வதற்கு இன்றைக்கு ஆளில்லை என்றார்.

தமுஎகச மாநிலத் தலைவரும் தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங்கம் பேசு கையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த அருணன், நாடாளு மன்றத் தேர்தல் பணிக்காக தீக்கதிர் அலுவல கப் பணிக்கு வந்தார். அன்று முதல் இன்று  வரை அலுப்பில்லாமல் எழுதிக் கொண்டி ருக்கிறார் என்பது தான் வியப்பு கலந்த மகிழ்ச்சி. தத்துவ ஆசான், திறனாய்வாளரான அருணன், ஒரு நதியைப் போல இயங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு நதி எத்தனை பேர் குளித்தார்கள், எத்தனை பேர் கால் நனைத்துச்  சென்றார்கள் என்பதைப் பற்றி கவலைப் படாது. அது தனது போக்கில் போய்க் கொண்டே இருக்கும். அதைப் போலத் தான் அருணன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுத்துலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  தம்முடைய கவிதையிலும் ஞானம் குறித்துப் பேசியுள்ளார். பொதுவாக ஒருவருக்கு ஞானம் எப்போது வருமென்றால் அவரது இறுதிக் காலத்தில் தான் என்பார்கள்.  ஆனால், வாழும்போது வருவது தான் ஞானம். அந்த  ஞானத்தை ஞானக் கோலங்கள்-200 ஆக வடித்துள்ளார் பேராசிரியர் அருணன். அவரது தமது கவிதையில், “மனிதனுக்கு மரணம் உண்டு; மனிதகுலத்திற்கு மரணமில்லை” என எழுதியுள்ளார். இதுவரை அருணன் எழுதிய நூல்களின் சுருக்கம் தான் ஞானக்கோலங் கள்-200. இன்றைக்கு பலர் “வார் ரூம்”- அமைத்து அருணனோடு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அருணன் மனிதர்களோடு யுத்தம் நடத்தவில்லை. தத்து வங்களோடு யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார் என்றார்.

தத்துவத்தெளிவு 

நூலைப் பெற்றுக்கொண்ட மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகை யில், “முதலில் கவிதை. பிறகு நாவல் எழுது வது தான் வழக்கம். ஆனால், நாவலிலிருந்து கவிதைக்கு வந்துள்ளார் அருணன். அவர் எந்தத்துறையையும் விட்டு வைக்கவில்லை. என்பதற்கு இந்தக் கவிதை நூல் ஒரு சான்று. எல்லா இயக்கங்களுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தேவை. மார்க்சிய இயக்கத் தின் பேராசிரியராக அருணன் விளங்குகிறார். தத்துவத் தெளிவுள்ளவன் அனைத்திலும் தெளி வாக இருப்பான்என்பதை மார்க்சிய ஆசான் தமது ஞானக்கோலங்களில் நிரூபித்துள்ளார். மனித வாழ்வின் சாரத்தைக் கூறும் நூல் ஞானக் கோலங்கள் என்றால் அது மிகையல்ல என்றார். ஏற்புரையாற்றிய அருணன், “கவிதை எழுது வேன் என நான்  கனவு கூட கண்டதில்லை. சுட்டுப்போட்டாலும் வராது என்ற முடிவில் தான் நான் இருந்தேன். எனது இந்த எண்ணத்தை உடைத்தது முகநூலில் சிலர் எழுதிய கவிதை கள் தான். உவமை, உருவகம் இல்லாமல் பல  கவிஞர்கள் முகநூலில் கவிதை எழுதுகிறார் கள். அந்த கவிதைக்கு தெறிப்பு இருந்தால் போதும். அதுதான் புதுக்கவிதை என்றாகி விட்டது. சில கவிஞர்கள் எழுதும் கவிதையில் ஓசை நயமுமில்லை, ஆனால் தெறிப்பு உள்ளது.  ஓசை நயத்தையும் சேர்த்து நம் கண் முன்னால் நிகழும் சம்பவங்களை, பிரச்சனைகளை தெறிப்புகளுடன் ஏன் கவிதையாக கோர்க்கக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடு தான் ஞானக்கோலங்கள்-200 என்றார். இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மதுரை  மாநகர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் லெனின் வரவேற்புரையாற்றினார். மதுரை மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அம்பிகா பழனிவேல் நன்றி கூறினார். முன்னதாக ஞானக்கோலங்கள்-200 நூலை செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் வெளி யிட நாவலாசிரியர் சு.வெங்கடேசன் எம்.பி. பெற்றுக்கொண்டார்.