இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தமிழ்நாட்டில் இரட்டையர் போல் செயல்பட்டவர்கள் வஉசிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும். அவர்களுக்கு உந்துதலாக இருந்தவர் மகாகவி பாரதியார். சிவாவின் எழுச்சிகரமான உரைவீச்சு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தது. அதனால் சிவாவுக்கு இரண்டு முறை தேசத் துரோக வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் கொடும் சிறைவாழ்க்கை சிவாவுக்கு தொழுநோயைத் தந்தது. ஆயினும் கூட தனது விடுதலை உணர்வை ஊட்டும் உரைகளை அவர் நிறுத்தவில்லை. மாட்டு வண்டியிலும் கால்நடையாகவும் சென்றே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார் என்பது அவரது அடங்காத விடுதலையை வேட்கையை வெளிப்படுத்துவதாகும். சிவம் பேசினால் சவம் எழும் என்பது அவரது சிறப்பு. உணர்ச்சி பொங்கும் பேச்சாளராக இருந்தது போல உரிமை உணர்த்தும் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் செயல்பட்டார். ஞானபானு எனும் மாதப் பத்திரிகையையும் பிரபஞ்சமித்திரன் எனும் வாரப் பத்திரிகையையும் நடத்தினார். ஏராளமான நூல்களையும் எழுதினார்.
வத்தலகுண்டுவில் பிறந்த சிவா மதுரையிலும் கோவையிலும் திருவனந்தபுரத்திலும் கல்வி கற்றவர். திருவனந்தபுரத்தில் ஏற்பட்ட ஆன்மிகத் தொடர்பால் தர்மபரிபாலன சமாஜம் எனும் அமைப்பை நிறுவி தேசவிடுதலை பிரச்சாரம் செய்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதனால் கால்நடையாகவே தமிழ்நாட்டுக்கு வந்து தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே பாரத மாதா ஆசிரமம் அமைத்து பாரத மாதா ஆலயம் நிறுவிட முயற்சியை மேற்கொண்டார். கோரல் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு வஉசியின் வழிகாட்டலும் உதவியும் இருந்தது போல சிவாவின் ஆதரவும் இருந்தது என்றும் அதன் நீட்சி யாகவே 1925-இல் கான்பூரில் நடக்கவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு செல்லத் திட்டமிருந்த நிலையில் தொழு நோய் பாதிப்பால் செல்ல முடியாமல் போன தாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் நாளில் தான் சிவா காலமானார்.
அக்.4 சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்