tamilnadu

img

தோழர் அறம் வளர்த்த நாதன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

திண்டுக்கல், அக்.25- சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழருமான  அறம் வளர்த்த நாதன் அக்டோபர் 24 திங்களன்று காலை 10 மணி அளவில் திண்டுக்கல் நந்தவனப்பட்டி கணேஷ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.  அவருக்கு வயது 91.   அறம் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் அறம் வளர்த்த நாதன். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர்.  திண்டுக்கல் பழனி ரோட்டில்  உள்ள காந்திஜி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  

சுதந்திரப் போராட்டத்தின் போது கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான தோழர் ஏ.நல்லசிவன் வழிகாட்டுதலின்படி பல்வேறு மக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர நாளேடான தீக்கதிர் நாளிதழில் கட்டுரைகளை எழுதினார். தீக்கதிர் நாளிதழ் குடும்பத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர்.   தோழர் அறம் வளர்த்த நாதன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.மணியின் மாமனார் ஆவார்.  நந்தவனப்பட்டி கணேஷ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், கட்சியின் மூத்த தலைவர் பி.கே.கருப்புசாமி, மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர்  ஆர்.சச்சிதானந்தம், தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன், இடைக்கமிட்டி செயலாளர்கள், மாவட்டக்குழு, ஒன்றியக்குழு, நகர்க்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர கவுன்சிலர்கள்,  வெகுஜன அமைப்பின் தலைவர்கள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.              (நநி)