tamilnadu

img

விலங்கை எது மனிதனாக ஆக்குகிறதோ அதுதான் அறிவு!

கோயம்புத்தூர், செப்.28 - எல்லாத் தாயும் பத்து மாதம் சுமந்து விலங்கைத் தான் பிரசவிக்கிறார். இந்த விலங்கை எது மனிதனாக்குகிறதோ அதுதான் அறிவு என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை கருத்தரங்கில் உரையாற்றினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு கருத்தரங்கம் கோவை மக்கள் சிந்தனை மேடையின் சார்பில் வெள்ளியன்று நடைபெற்றது.  காந்திபுரம் மலையாள சமாஜத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் விஜயா மு.வேலாயுதம் தலைமை ஏற்றார். தேஜாவு கார்த்தி முன்னிலை வகித்தார். எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் டி.எஸ்.ராஜாமணி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  இந்நிகழ்வில் பங்கேற்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது: ஆன்மீக தளத்தில் செயல்பட்ட தவத்திரு அடிகளார், அறிவியல் தளத்திலும் சிறப்பாக செயல்பட்டவர். உலகம் முழுவதும் கொண்டாடிய மா முனிவர். காவி கட்டிய கார்ல் மார்க்சாக  வாழ்ந்தவர் குரு மகா சன்னிதானம் அவர்கள். மறைந்து 30 ஆண்டுகள் ஆகிறது; அவர் சிந்திப்பதை நிறுத்தி முப்பது ஆண்டுகளுக்கு பின்னரும், அவரைப் பற்றி மக்கள் சிந்தனை மேடை சிந்தித்துக் கொண்டிருக்கிறது.  உலகமெங்கும் அவர் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது. 

மக்கள் மனங்களைத் தூய்மைப்படுத்தியவர்

எங்கெல்லாம் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பயணித்து மக்களிடம் ஒற்றுமையை, நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் மகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார். ஆன்மீகத் தளத்தில் முடை நாற்றம் வீசுகின்ற நிலைப்பாடுகளை எல்லாம் மாற்றிக் காட்டியவர். திருக்கோவிலில் புதர் மண்டி கிடந்த களைகளை மட்டுமல்ல, சமூகத்தின் மக்கள் மனங்களில் இருந்த களைகளையும் தூய்மைப் படுத்தியவர்.

மக்கள் தொண்டு

சமயம் என்பது மக்கள் தொண்டு, சமயப் பணி என்பது மக்கள் சேவை. சமயம் என்பது இல்லாதவரை இருப்பவராக ஆக்கிக் காட்டுவது. மகேஸ்வர பூசையில் சிலருக்கு அனுமதி, சிலருக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் அங்கு இருந்து வெளிநடப்பு செய்தார். சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்! கோத்திர(ம்) மும் குலமும் கொண்டு என் செய்வீர்?  என அப்பர் பெருமான் கேட்டாரோ, அதுபோன்று எளிய மக்களுக்கு குரல் கொடுத்தார். கீழ் வெண்மணி துயர் சம்பவத்தின்போது முதன் முதலில் நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல் ஆதினம் அவர். 

எது அறிவு

பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிற பட்டங்கள் அல்ல அறிவு. நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன் என்பது அல்ல மேன்மையின் முகவரி. அரங்கத்தில் அருமையாக பேசுகிறேன் என்று அயர்ந்து போவதில்லை அறிவு. எதுதான் அறிவு? திருவள்ளுவர் கூறுகிறார், ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்று. நேற்று முன்தினம் சுனாமி என்ற துன்பம் வந்தது; நேற்று கொரோனா என்ற துன்பம் வந்தது; ஆனால் எந்த துன்பம் வந்தாலும் நேற்றைய துன்பத்தை எது இன்பமாக மாற்றிக் காட்டுகிறதோ அதுதான் அறிவு. மனித குலத்து துன்பத்தை தமது துன்பமாக கருதி இன்பமாக எவர் ஒருவர் மாற்றிக் காட்டுகிறாரோ அவர்தான் அறிவாளி. நாம் என்ன நினைக்கிறோம்? நிறைய படித்தால் அவர்தான் அறிவாளி என நினைக்கிறோம். எல்லா தாயும் பத்து மாதம் சுமந்து, பிரசவத்தின் போது ஒரு விலங்கை தான் வெளியே அனுப்புகிறாள். அந்த விலங்கை எது மனிதனாக ஆக்குகிறதோ அதுதான் அறிவு. மருத்துவராகலாம், இன்ஜினியராகலாம், சட்ட வல்லுனராகலாம், ஆனால், முதலில் மனிதனாக வேண்டும். எது ஒன்று மனிதனாக ஆக்குகிறதோ அதுதான் அறிவு. இவ்வாறு அவர் பேசினார். இக்கருத்தரங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில், கே.எஸ்.கனகராஜ் நன்றி கூறினார்.