tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களில் நாட்டுக்கே முன்னுதாரணம் கேரளம்

ஹைதராபாத், டிச.28- மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களில் நாட்டுக்கே முன்னுதாரணமாக கேரளம் உள்ளது என அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறினார். ஹைதராபாத்தில் டிசம்பர் 26 முதல் 28 வரை நடந்த ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் (NPRD) 3வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:

100 கோடி மாற்றுத் திறனாளிகள்

உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி ஒட்டுமொத்தமாக உலகில் 100 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதன் பொருள் உலகில் மிகப்பெரிய புறக்கணிக்கப்பட்ட பகுதியினராக இவர்கள் அதிகரித்துள்ளனர் என்பதாகும். மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதில் 80 சதவிகிதம்பேர் வளரும் நாடுகளில் உள்ளதாக யுஎன்டிபி அறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி சரியாக 40 கோடி மாற்றுத் திறனாளிகள் வளரும் நாடுகளில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். வறுமையின் முக்கிய விளைவாக ஊனம் உள்ளது. உலகில் 70 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். கல்வி சுகாதாரத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊனம் தடையாக உள்ளது. சட்டப்படி இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இப்போதுதான் அதற்கான முன்முயற்சிகள் துவங்கியுள்ளன. 2007 அக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபையின் யுஎன்சிஆர்பிடி கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவுகளை இந்தியாவும் ஏற்றுக்கொண்டு 15 ஆண்டுகள் ஆனபிறகும் சட்டப்பூர்வமானவற்றைக்கூட இங்கு நிறைவேற்றவில்லை.

உலகம் முழுதும் 15 சதவிகிதம்; இந்தியாவில் மட்டும் 2.2சதவிகிதமா?

இந்தியாவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 கோடியே 68 லட்சம் ஊனமுற்றோர் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருள் மக்கள் தொகையில் 2.2 சதவிகிதம், அதாவது ஒரு லட்சம்பேரில் 2 ஆயிரத்து 200 பேர் ஊனமுற்றோர் என்பதாகும். உலகம் முழுவதும் 15 சதவிகிதம் ஊனமுற்றோர் உள்ளனர். நமது நாட்டில் 2.2 சதவிகிதம் தான் என்பது நம்பும்படியாக இல்லை. யுஎன்சிபிஆர்டியில் இந்தியா இணைந்து பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் ஊனமுற்றோர் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் பல்வேறு பிரிவுகள் இன்னும் அமலாகவில்லை. விலைவாசி உயர்வு அன்றாட வாழ்வில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண மக்களுக்கு கிடைத்து வந்த பல்வேறு மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மேலும்  பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை அனைத்து விளிம்புநிலை மக்களையும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை கடுமையாக பாதித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட இவர்களுக்கு நிவாரணம் அளிக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய கல்வி, சுகாதாரம், இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சக்கர நாற்காலியில் வாழ்நாளை கழித்தவர். அவர் தனது அனுபவத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் மூன்று பிரச்சனைகளைக் குறிப்பிடுகிறார். முதலாவது உடல் ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்; இரண்டாவது பொருளாதார சவால்; இத்தகைய சூழ்நிலையில் அரசுகள் இவர்களை எப்படி பார்க்கிறது என்பது மூன்றாவது சவால்.

தடையற்ற சூழல் அவசியம் தேவை

மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ பாதிக்கப்பட்ட அனைவரது தேவைகளையும் நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அரசு இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எளிதில் அணுகும் தடையற்ற சூழல் வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கற்றல் சூழல் எளிதாக அமைய வேண்டும். சிலர் கற்றல் குறைபாடு காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்களை பள்ளிகளில் உரிய முறையில் அணுக வேண்டும். ‘எளிதில் அணுகல்’ தொடர்பான ஒன்றிய அரசின் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. ரயில் பயணம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஊனமுற்றோருக்கு பெரும் சிரமத்தை அளிப்பதாக உள்ளது. புதிய கல்விக்கொள்கை மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி குறித்து எதையும் கூறவில்லை. கல்வியில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு, உதவிகள் குறித்து கூறப்படாதது கெடுவாய்ப்பாக உள்ளது. புதிய கல்விக்கொள்கையில் ‘அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி’ அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  அதற்கு தேவையான எத்தனை கணினிகள் உள்ளன? இணையத் தொடர்பு எங்கே இருக்கிறது?. பொதுவான பள்ளிகளில் தொழில்நுட்பம் இல்லாத பிரச்சனை என்றால் மற்றொரு புறம் சிறப்பு பள்ளிகளில் இத்தகைய எந்த ஏற்பாடும் இல்லை. அப்படியென்றால் இரண்டு விதமான கல்வி முறையை புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது. புதிய கல்விக்கொள்கை வணிகமயமாக்கல், மதவெறி மயமாக்கல், மைய அதிகாரத்திற்குள் கொண்டுவருதல் ஆகிய கொள்கைகளைத்தான் முன்வைக்கிறது. 

நாட்டுக்கே முன்னுதாரணம்!

கேரள அரசின் திட்டக்குழு மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புடன்கூடிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தில் முன்னேறி கவுரவமாக வாழும் நிலையை உருவாக்கி வருகிறது. அதிகாரமளித்தல், மறுவாழ்வு, குடியிருப்பு, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கேரள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம், ஆணையரகம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ளும் பணிகள் நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளன. கேரள அரசு மாற்றுத்திறனாளிகள் பிரச்சனைகளில் அது அவர்களின் உரிமை என்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. கேரள அரசு மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 ஐ முழுமையாக செயல்படுத்துகிறது. கேஎஸ்எஸ்எம் திட்டத்தின் மூலம் கரு முதல் கல்லறை வரையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  6 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சிகளும் ஆலோசனைகளும் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. கல்வியில் 5 சதவிகிதம், வேலைவாய்ப்பில் 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வித்யா கிரணம், வித்யா ஜோதி போன்ற திட்டங்கள் மூலம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்களிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப சமூக நீதித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்போருக்கு ரூ.45 கோடி

சுய வேலைவாய்ப்புக்கு தேவையான உதவிகளை கடந்த ஓராண்டில் 7,745 மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ளனர். இதில் 2,700 பேர் பெண்கள். ஊனமுற்றோர் நல கூட்டுறவு வங்கி மூலம் ஆண்டுக்கு ரூ.45 கோடி கடும் ஊனமுற்றோரின் பாதுகாவலர்களுக்கு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கலை, நடனம், மேஜிக் போன்ற தனித்திறன்கள் ஊக்குவிக்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுக்கான பொருளாதார உதவிகள் அளிக்கப்படுகின்றன. அதற்கான நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகஜீவனம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சென்று உதவிகள் வழங்கப்பட்டன. கம்யூனிட்டி கிச்சன் மூலம் உணவு கிடைப்பது உறுதி  செய்யப்பட்டது.  இவ்வாறு கேரள அமைச்சர் ஆர்.பிந்து பேசினார்.