tamilnadu

கறம்பக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம் தேவை

கறம்பக்குடி வேளாண்மை விரிவாக்க  மையத்திற்கு புதிய கட்டிடம் தேவை

விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 31-  மிகவும் பழுதடைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி பேசுகையில், சமீபத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமைந்தன. நேற்பயிர்களும் நாசமாகியுள்ளன. பாதிப்புகள் குறித்து விரைவாக கணக்கீடு செய்து உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். கறம்பக்குடி தாலுகா அம்புக்கோவில் பகுதிகளில் இரவு 10 முதல் காலை 6 மணிவரை மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. தற்போது, இரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்கருதி மீண்டும் பழையபடி இரவு 10 முதல் காலை 6 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். கோரிக்கைகள் குறித்து உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.