கண்மணியக்கா எதற்கும் நேரிடையாகப் பதில் சொல்லமாட்டாள். எல்லாமே அவளுக்குப் புதிர் தான். புதிரை விடுவிக்கவும் மாட்டாள். நாம் தான் அந்த புதிர்களில் சிக்கிக் கொண்டு சுற்றி சுற்றி வரவேண்டும். அப்படித்தான் அவளுடைய தம்பி சுந்தர் அவளிடம், “ யெக்கா எங்கே போயிட்டு வாரே..” என்று கேட்டாள். அதற்கு கண்மணி, “ நேற்று நீ எங்கே போயிருந்தியோ அந்த இடத்துக்கு எதிரில் உள்ள இடத்திலிருந்து வடக்கே நூறு அடி தூரமும் தெற்கே ஐம்பது அடி தூரமும் போனால் ஒரு இடம் வரும்.. அங்கே போய்ட்டு திரும்பி வந்தேன்..”
என்று சொன்னாள். அதைக்கேட்ட சுந்தர் கொஞ்சநேரம் யோசித்தான். நேற்று எங்கே போயிருந்தேன்? பள்ளிக்கூடம். அங்கேருந்து நூறு அடியில் ஐஸ்கிரீம் கடை இருக்கு.. அதிலிருந்து ஐம்பதடி தூரத்தில் மிட்டாய்க்கடை தானே இருக்கு..
ஓ மிட்டாய்க்கடைக்குப் போயிட்டு வந்திருக்காளா?
“ யெக்கா நான் கண்டுபிடிச்சிட்டேன்.. நீ மிட்டாய்க்கடைக்குத் தானே போயிருந்தே.. எனக்கு மிட்டாயி...”
என்று இளித்தபடியே கேட்டான். கண்மணிக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவள் சிரித்துக் கொண்டே,
“ போடா தின்னிப்பண்டாரம்…..மிட்டாய்க்கடையைத் தவிர வேறு ஒன்றும் இல்லையா? நல்லா யோசிச்சுப்பாரு.. “
என்று சொன்னாள். வேறு என்ன இருக்கிறது.? ஒரு டீக்கடை இருக்கிறது. அக்கா டீக்கடைக்குப் போகமாட்டாள். அப்புறம் எங்கே?
“ யெக்கா எனக்குத் தெரியல.. நீயே சொல்லு..”
“ போடா மண்டு.. அந்த இடத்தில பாரதியார் சிலை இருக்கு.. இன்னிக்கு அவரோட பிறந்தநாள் இல்லையா.. அதான் போய் வணங்கிவிட்டு வந்தேன்.. “
அப்போதுதான் சுந்தருக்கு அங்கே பாரதியார் சிலை இருப்பது நினைவுக்கு வந்தது. இப்படித்தான் எதையெடுத்தாலும் புதிர் போடும் அக்காவிடம் ஒரு நாள் எதிர் வீட்டில் குடி வந்திருந்த அத்தை மாட்டிக் கொண்டார். அவர் அக்கா கண்மணியிடம்,
“ நீ நல்லாக்கணக்கு போடுவியாமே.. எங்கே நான் கேக்கிற புதிருக்கு விடை சொல்லு பாப்போம்..”
என்று சிரித்துக் கொண்டே கேட்டார். கண்மணியக்காவும் எங்கே சொல்லுங்க பாப்போம் என்கிற மாதிரி பார்த்தாள்.
“ சுந்தர் மொத்தம் 8 சிலந்திகளையும் வண்டுகளையும் பிடிச்சு ஒரு பெட்டியில் அடைச்சு வைக்கிறான்.. அந்தச் சிலந்தகள் வண்டுகளோட கால்களை எண்ணிப்பார்த்தா 54 கால்கள் இருக்கு… அப்படின்னா சுந்தர் பிடிச்சதுல எத்தனை சிலந்திகள் இருக்கும்.. எத்தனை வண்டுகள் இருக்கு.ம்.”
கண்மணியக்கா கொஞ்சம் யோசித்தாள். டக்கென்று பதில் சொன்னாள்.
“ ஐந்து வண்டுகள், மூன்று சிலந்திகள்..”
சுந்தருக்குப் புரியவில்லை. அக்காவுக்கு மட்டும் எப்படி இப்படி டக் டக்குன்னு கணக்கு வருது?
“ எப்படிக்கா கண்டுபிடிச்சே? “
“ ரொம்ப ஈசிடா கண்ணா.. வண்டுக்கு எத்தனை காலு..? “
“ ஆறு.. சிலந்திக்கு எட்டு.. இது தெரியாதா? “
“ கரெக்ட்.. எட்டும் சிலந்தியாயிருந்தா எத்தனை கால்கள் வரும் “
“ அறுபத்திநாலு..”
“ அது சரியில்லை.. மொத்த கால்கள் ஐம்பத்திநாலுதானே.. சரி எட்டும் வண்டுகளா இருந்தா எத்தனை கால்கள் வரும்..”
“ நாற்பத்தியெட்டு.. “
“ இதுவும் சரியில்லை.. அப்படின்னா ஒரு வண்டை எடுத்துட்டு ஒரு சிலந்தியை வைச்சா சரியாவருதா இல்லை ஐம்பத்தியாறு வருது.. இரண்டு வண்டுகளை எடுத்துட்டு இரண்டு சிலந்திகளை வைச்சா.. ஐம்பது தான் வருது.. இப்போ…”
“ ஐய் நான் கண்டுபிடிச்சிட்டேன்… மூன்று வண்டுகளை எடுத்துட்டு மூன்று சிலந்திகளை வைச்சா சரியா ஐம்பத்திநாலு வருதே. அதாவது அந்தப்பெட்டியில் ஐந்து வண்டுகள் மூன்று சிலந்திகள் இருந்தன .”
“ வெரிகுட்..”
எதிர்வீட்டு அத்தையும் கண்மணியக்காவும் ஒன்று போல சொன்னார்கள்.