மதுரை:
மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வு முறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை எஸ். எஸ். காலனியைச் சேர்ந்த லியோனல் ஆண்டனிராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுமார் 1.25 லட்சம்மாணவர்கள் தொலைதூர கல்வி மூலமாக பயின்று வருகின்றனர். இதற்காகபல மையங்களும் அமைக்கப் பட்டுள்ளன. ஏற்கனவே தொலைதூர கல்விக்கான தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கடந்தபிப்ரவரி மாதம் நடைபெற்ற தொலைதூரக்கல்விக்கான தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள்எழுந்துள்ளன. ஒரு சில மையங்களில் தேர்வர்கள், அவரவர் இருக்கும் இடங்களில் தேர்வு எழுத அனுமதி தந்ததோடு, விடைத்தாள்களை பல மாதங்கள் கழித்து தேர்வு மையங்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக விசாரணை குழு மற்றும்சிண்டிகேட் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க கூறலாம் என முடிவெடுத்தனர். ஆகவே மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வு முறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகசிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளவும் அதனை நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை புதனன்று விசாரித்தநீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இது தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், தேர்வு முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, துணை வேந்தர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.