tamilnadu

img

‘‘காலதேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே!’’ - ‘‘இன்னாளே வரே’’

(Innale Vare) மலையாளம்-2022 (சோனி லைவ்)

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இரண்டுமே வெவ்வேறு கதைக்களங்கள் என்றாலும் இரண்டிலுமே ஒருவர் இரு பெண்களை காதலிப்பது பற்றியதே. தமிழ் பட காதலன் பெண்களின் அகத்தை துச்சமாக பாவிக்கிறான். மலையாளப் பட காதலனோ இதில் வேறுபடுகிறான். இரண்டிலுமே பெண்கள் பற்றிய சமூகப் பார்வை முற்றிலும் மாறுபடுகிறது. தமிழ் படத்தின் பெயர், ‘‘காத்துவாக்குல ரெண்டு காதல்’’. மலையாள படத்தின் பெயர் ‘‘இன்னாளே வரே’’. ஆதிசங்கர், மலையாள திரை உலகின்  பிரபல நட்சத்திரம். அய்சூ, கார்த்தி ஆகிய இருவரையும் காதலிக்கிறான்; அய்சூ  பெண்களுக்கான ஆடையகம் நடத்துகிறாள். கார்த்தி திரைப்பட முன்னணி நடிகை. இவள் திருமணம் ஆனவள். கணவன் துபாயில். இணையரிடம் அன்பை எதிர்பார்த்து ஏமாந்த கார்த்திக்கு அந்த அன்பு, சக நடிகன் ஆதியிடம் கிடைப்பதால், அவனை உளமார காதலிக்கிறாள். இருப்பினும், ஆதியின் ஆழ்மனதில், நடிகையின் உறவை, கலைவதே சரியானது என நினைக்கிறான். அய்சூவை மணமுடிக்க விரும்புகிறான். ஆனால், கார்த்தியோ, ஆதியின் மனதில் அய்சூவைவிட கூடுதலான ஸ்பேஸ் கேட்கிறாள். இவனை விட்டு விலக மறுக்கிறாள்.

தயாரிப்பாளர் ஆனந்தனின் நாள்பட்ட படத்திற்கான கதை காலத்திற்கேற்றதாக இல்லாததால், ஆதி டப்பிங் குரல் கொடுக்க மறுக்கிறான். டப்பிங் கொடுக்காவிட்டால் தற்கொலை தான் தீர்வு   என்கிறான். ஆதி இதனை அலட்சியப்படுத்துகிறான். பிரபல நிறுவன விளம்பரப் படத்தில் நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படுமென நம்புகிறான். நடிக்க மறுப்பதால் நிறுவன உரிமையாளரின் கோபத்திற்கும் ஆதி ஆளாகிறான். இடையே, ஆதியின் சொந்த தயாரிப்பில், நாயகனாக நடித்த படம் தோல்வியைத் தழுவுகிறது. கடன் வலையில் விழுகிறான். ஓரிரவில் கார்த்தி, தான் கருவுற்றிருப்பதாகச் சொல்லி, கருக்கலைப்புக்கான மருந்து வாங்கி வர ஆதியை நச்சரிக்கிறாள். மிரண்ட ஆதி, மருந்தை வாங்கி வருகையில், வண்டி பழுதாகிறது. அவசரகதியில் நடக்கையில், சானி என்பவள் அவளது காரில் லிப்ட் தருகிறாள். தானும் தன் கணவனும் அவனது பரம ரசிகர்கள் எனவும்; வீட்டிற்கு வந்து தனது கணவனுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக் கெஞ்சுகிறாள். அழைப்பை ஏற்று வீட்டிற்குச் செல்லும் ஆதியை, தந்திரமாக, ஆளில்லாத தனது தங்கையின் வீட்டில் பூட்டி, அவனது கைபேசியையும் பறித்து விடுகிறாள். ஆதி, பல வழிகளில் தப்பிக்க முயல்கிறான். ஒரு சமயத்தில் அதிர்ஷ்டவசமாக செல்பேசி கிடைக்கிறது. காதலி அய்சூவின் எண் மட்டும் ஞாபகம் வர, அவளைத் தொடர்பு கொள்கிறான். அவளோ, நடிகையுடனான இவனின் கள்ளக்காதலை குறிப்பிட்டு, பொறுக்கி எனப் பேசி, ஆதியின் சூழலை கிஞ்சிற்றும் உள்வாங்காமல், காதலை முறித்து, இணைப்பையும் துண்டிக்கிறாள்.

சானியின் நண்பன் சரத். இவன் கணினி நிபுணன். சானியும், சரத்துமே, சதித்திட்டம் தீட்டி ஆதியைக் கடத்தியவர்கள். இருவரும் ஆதியை விடுவிக்க ஒன்றரை கோடி ரூபாய் கேட்கிறார்கள். ஆதி, தன்னிடம் பணமே இல்லை எனக் கூறுகிறான். இதனால் சரத், சானி ஆகியோர், ஆதிக்குத் தெரியாமல், கணினி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, பணம் பறிக்கத் திட்டமிடுகிறார்கள். ஆதியின் போனில் அவனே பேசுவது போல், அவனது மேனேஜர் ஜோமியிடம் பேசியும், வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியும், ஏற்கனவே மறுத்த விளம்பரப் படத்தில் நடிப்பதாகவும், அதற்கான சம்பளமாக ரூபாய் ஒன்றரைக் கோடி பெற்று, அதனை தங்கள் வசம் ஒப்படைக்க ஆதியின் குரலில் அறிவுறுத்துகிறார்கள். மானேஜர் ஜோமியும் இதனை நம்பி அடிபிசகாது செய்கிறான். ஆதி விடுவிக்கப்படுகிறான். உடன் ஆதி புகாரளிக்க, போலீஸ்படை சானி வீட்டிற்கு விரைகிறது. அங்கு சானி, அஞ்சலி என்ற பெயரில் கதவைத் திறக்கிறாள். ஆதி தன்னை காதலித்ததாகவும், கடந்த ஒரு வாரமாக இங்கு தங்கி தன்னை சித்ரவதை செய்ததாகவும் பொய் கூறுகிறாள். அதற்கு சாட்சியாக ஆதியின் கைபேசியில், போலியான இன்ஸ்டாகிராம் காதல் சாட்டினை காண்பிக்கிறாள். போலீஸ் அஞ்சலியின் நடிப்பை நம்புகிறது. ஆதியின் உண்மை எடுபடவில்லை.

இதன்பின், கார்த்தி கருவுற்றிருப்பதை அறிந்த துபாய் கணவன், துயரத்திலுள்ள ஆதியின் வீட்டிற்கு வந்து அவனைத் தாக்கி  விருது கோப்பைகளை உடைக்கிறான். அந்நிகழ்வுக்குப்பின் யாரும் எதிர்பாரா வகையில், ஆதி, காணாமல் போகிறான். போலீஸ் தேடுகிறது. அஞ்சலியின் வீட்டுக் கடன் தவணை தவறியதால், ஏலம் போன வீட்டை, வங்கி அதிகாரிகளால் சர்வே செய்யப்படுகிறது. அப்போது வீட்டின் பின்புறம் ஆதி கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டறியப்பட்டு, போலீஸால் மீட்கப்படுகிறான். அஞ்சலியின் வீட்டில் அவளது தாய், தங்கை, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்பாக, காவல் அதிகாரிகளிடம், மீட்கப்பட்ட ஆதி, அஞ்சலியை பழிவாங்க, தான் அஞ்சலியை காதலிப்பதாகவும், ஆனால் அஞ்சலியும், வினுவும் (சரத்) பணம் கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் போலீசிடம் பொய் சொல்கிறான். அஞ்சலி, வினு கைதாகிறார்கள். நடிப்பில் தன்னை மிஞ்ச முடியாது என்ற களிப்பில் வீட்டிலிருந்து வெளியேறுகையில், அங்குள்ள அறையில் அஞ்சலியின் தந்தை படுத்த நிலையில் இருப்பதை பார்க்கிறான். அவர் தான் தயாரிப்பாளர் ஆனந்தன் என்பதும், இவன் டப்பிங் குரல் கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்று, பிழைத்து தற்போது மகள் அஞ்சலியின் பராமரிப்பில் உள்ளதை அறிகிறான். அஞ்சலி சானுவாகவும், வினு சரத்தாகவும் மாறி தன்னை கடத்தியமைக்கான காரணத்தையும் அறிகிறான்.

தான் டப்பிங் குரல் கொடுக்காததால், ஒரு குடும்பம் பல வழிகளில் சீரழிந்தததை எண்ணி குற்ற உணர்வு கொள்கிறான். இதற்கு பிராயச்சித்தமாக, முதலில் அஞ்சலி, வினு மீதான போலீஸ் புகாரை வாபஸ் வாங்குகிறான்.  பின்பு, ஆதியின் மார்க்கெட் உயருகிறது. புகார் திரும்பப் பெற்றமைக்கு, அஞ்சலி, வினு நன்றி கூற ஆதியை சந்திக்கிறார்கள். அஞ்சலியின் தந்தைக்கு புதிய படம் தனது தயாரிப்பில் நடித்துக் கொடுப்பதாகவும், மேலும் பல உதவிகள் செய்வதாகக் கூறிக்கொண்டே, கார்த்திக்கும் தனக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கானப் பத்திரிக்கையை அவர்களுக்கு வழங்குவதுடன் படம் நிறைவடைகிறது. பெண்கள் என்றாலே, ஆண்கள் பின் சுற்றுபவர்கள், தனியே முடிவெடுக்கத் தடுமாறுகிறவர்கள் என்பதாக தமிழ் திரைப்படம் பிற்போக்காக காட்டப்பட்டுள்ளது; ஆனால், பிடிக்காத கணவனை தைரியமாக விலக்கி, மனம் பிடித்தக் காதலன் ஆதியைக் கைபிடிக்கின்ற கார்த்தியையும்; ஆபத்தில் சிக்கிய காதலனின் நிலையறியாத அய்சூவை விலக்கி, தனது கருவைச் சுமக்கின்ற பிறர்மனையாள் கார்த்தியைக் கரம் பிடித்துள்ள ஆதியையும் இப்படம் பேசுவதால், மலையாளப் படம் முற்போக்கு தடம் பதிக்கிறது.

மாடத்தின் வெளிச்சத்திலேயே இருந்த ஆதிக்கு, திடீர் இருட்டு நல்இணையரை அடையாளங்காண உதவியதோடு, வாழ்வு குறித்த புரிதலை நாயகனுக்கு உணர்த்தியதோடல்லாமல், பார்வையாளர்களுக்கும் கடத்தியுள்ளது. சானியாக, அஞ்சலியாக நடித்துள்ள நிமிஷா சஜயன், ரசிகை, ஆதியை பழிவாங்குபவள், குடும்பப் பொறுப்பானவள் என அனைத்துப் பாத்திரங்களிலும் ஜொலித்துள்ளார். இவர்தான் பல விருதுகளைப் பெற்ற ‘‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’’ திரைப்படத்தில் தூள்கிளப்பியவர். ஆதியாக நடித்துள்ள ஆசிப்அலி, பல உணர்ச்சிகளை முகபாவத்தில் காண்பித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். படத்தில் விறுவிறுப்புக்கு குறைவில்லை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, பேசா குரலை பேச வைக்கும் என்பது விழிப்பிற்கான செய்தி. இயக்கம் ஜிஸ் ஜாய்.