புதுக்கோட்டை, ஜூலை.23- இந்த மண்ணுக்காக, மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் சிந்தியிருக்கிற ரத்தமும், வியர்வையும் அளப்பரியது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை முன்னாள் தாலுகா செயலாளருமான தோழர் லெனின் அவர்களின் 28-ஆம் ஆண்டு நினைவு தினம் கந்தர்வகேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோழர் லெனின் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்தும், 40 அடி கொடிமரத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தும் அவர் பேசியது: பொதுவாக குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் ஐந்து, ஆறு ஆண்டுகள் அவரது நினைவுநாள் கடைப்பிடிக்கப்படும். பின்னர் அது படிப்படியாக மறைந்துவிடும். தோழர் லெனினின் 28 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நாம் சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். பொதுவாழ்க்கையில் சிறப்பாக பங்களிப்பைச் செய்த தோழர்களை கம்யூனிஸ்ட் கட்சி என்றென்றைக்கும் மறக்காது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே உதாரணம். எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக தோழர் லெனின் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளுக்காக லெனின் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறக்க முடியாது. சிறைச்சாலைதான் அவரை சிறந்த கம்யூனிட்டாக மாற்றியது. அவரது விடுதலைக்கு நம்முடைய தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணியன், ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோர் பெரு முயற்சி எடுத்தனர். 15 ஆண்டுகள் கழித்து விடுதலையான அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் பல குழுக்கள் இயங்கிய அந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் சரியான கட்சி என முடிவெடுத்து எந்தவித ஊசலாட்டமும் இல்லாமல் பணியாற்றினார். கந்தர்வக்கோட்டை பகுதியில் மக்களுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி மகத்தான மக்கள் தலைவராக உயர்ந்தார்.
இந்த மண்ணுக்காக, மக்களுக்காக கம்யூனிட்டுகள் சிந்தியிருக்கின்ற ரத்தமும், வியர்வையும் கணக்கில்லாதது. ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோழர்கள் தன்னுடைய உழைப்பை, உதிரத்தை இந்த மண்ணுக்கு உரமாக்கி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் ஊழியர்களின் தியாகத்திற்கு சற்றும் குறையாதது அவர்களது குடும்பத்தினரின் பங்கு. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொதுவாழ்க்கையில் மிளிர முடியாது. அந்த வகையில் இங்கே வந்திருக்கும் தோழர் லெனினின் துணைவியார் அஞ்சலை அம்மாளையும், அவர்களின் குடும்பத்தினரையும் மனதாரா பாராட்டக் கடமைப்பட்டு இருக்கிறோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். நிகழ்ச்சிக்கு கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கல்வெட்டைத் திறந்து வைத்து கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் உரையாற்றினர். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் ஆகியோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், த.அன்பழகன், சு.மதியகழன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச்சாமி, கே.தங்கவேல், எஸ்.பாலசுப்பிரமணியன், டி.சலோமி, ஒன்றியச் செயலாளர்கள் எம்.வீரமுத்து, எஸ்.கலைச்செல்வன், டி.லெட்சாதிபதி, எம்.ஜோதி ஆர்.சக்திவேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.