tamilnadu

img

ஜெயலலிதா பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

மதுரை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மணிமாறன் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,” நான் அதிமுக கட்சியின் சிவகங்கை மாவட்ட மாணவரணி பொருளாளராக உள்ளேன். மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா 11 ஆண்டுகளாக தமிழக முதல்வராக பொறுப்பிலிருந்துள்ளார். 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அரசியலில் முழு ஈடுபாட்டுடன் பயணித்த ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் கொண்டு வந்தார். 

அவரின் சிறப்பான நிர்வாகத் திறன்களை பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஈடு செய்ய இயலாத, ஒப்பற்ற தலைவரான ஜெயலலிதாவை உலகின்பல்வேறு தலைவர்களும் பாராட்டியுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம்தேதி  அவர் இறந்தார். அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  ஆகவே மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன், மனுதாரர் பொருத்தமான காரணங்களின்றி வழக்குத் தொடர்ந்துள்ளார் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;