tamilnadu

img

கோபுர குடிசை - பெரணமல்லூர் சேகரன்

சிறிய ஊர் என்றும் சொல்ல முடியாது. பெரிய ஊர் என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் பேரூராட்சி தான் அது. பெரிய தெரு என்பது பெயருக்கு ஏற்றாற்போல் அகன்றும் நீளமாகவும் இருந்தது‌. அந்தத் தெருவில் எல்லாமே மெத்தை வீடுதான். ஆனால் மத்தியில் ஒரு குடிசை வீடு இருந்தது பலரது கண்களை உறுத்தியது. சிலர் மட்டுந்தான் அந்த வீட்டைப் பற்றியும் அவ்வீட்டில் வாழ்பவர்களைப் பற்றியும் கவலைப்பட்டனர். பலர் தெருவின் அழகு கெட்டுப் போவதாக பேசிக் கொண்டனர். அவர்களுக்கு அந்த வீட்டில் வசிப்பவர்களைப் பற்றிய சிந்தனை துளியும் இல்லை. குடிசை வீட்டில் வாழ்பவர்களைப் புழு பூச்சி யைப் பார்ப்பதுபோல்தான் பார்த்தார்கள் அந்தத் தெருவில் உள்ளவர்கள். அதுவும் இரண்டு பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வசதியானவர்கள். அதிலும்  குடிசைக்கு வலது புறம் மாளிகை போல் கட்டப்பட்ட வீட்டில் வாழும் பெரும் பணக்காரர். அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் குடிசையையும் குடிசை வாழ் மக்களையும் பார்க்க விரும்புவதில்லை. “அம்மா, பக்கத்து வீட்டுப் பசங்ககூட விளை யாடனும்னு ஆசையா இருக்கு. நீ கேட்டுப் பாரும்மா” என்று ஒருமுறை குடிசை வீட்டு குப்புவின் ஏழு வயது மகன் கோபு கேட்டான். அவனது அம்மா என்ன சொல்வது என்று கலங்கி, “வேண்டாம் கண்ணு. அவங்க விளையாடும் விளையாட்டெல்லாம் வேற‌. உனக்கு அதெல்லாம் வேண்டாம். வேணும்னா ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் நீ நம்மூர் ஹை ஸ்கூல் கிரவுண்ட்ல உன்ன மாதிரி பசங்ககூட விளையாடிட்டு வா” என்று அமைதிப்படுத்தினாள். அதிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோபு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிவிட்டு வருவது வழக்கம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டுத் தோட்டத்தில் அந்தக் காலத்து மண் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சிக்  கொண்டிருந்தாள் குப்பு. அவளது நினைவுகள் ஐந்து  வருடங்களுக்கு முன் விபத்தில் பலியான லாரி டிரைவர் கணவன் மணி மீது நீந்திக் கொண்டி ருந்தன. மணி மரணமடைந்த நாளிலிருந்து உள்ளூர்  ஓட்டலில் பெருக்குவது, எச்சில் இலை எடுப்பது போன்ற வேலைகளைச்  செய்து கொண்டு, அந்த  வருமானத்தில் தனது மகனுடன் காலந் தள்ளுவதை எண்ணியபடி ரேஷன் அரிசி கஞ்சியைத் துழாவிக் கொண்டிருந்தாள். கோபுவோ பக்கத்து வீட்டு மாளிகை  வீட்டு மாடியில் சுரேஷும் தினேஷும் கைப்பந்து ஆடிக்  கொண்டிருந்ததையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  “அம்மா, இன்னுமா சாப்பாடு செய்யல. நான் சாப்ட்டு விளையாட ஸ்கூல் போகனுமில்ல” என்று சுருங்கிய முகத்துடன் கேட்டான் கோபு.  “ஒரு அஞ்சு நிமிஷம் இரு கண்ணு.” என்றபடி கஞ்சிக்கான தேங்காய்த் துவையலை அம்மியில் குனிந்தபடி அரைத்துக் கொண்டிருந்தாள். திடீரென அலறல் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். மாடியிலிருந்து தினேஷ் விழுவது தெரிந்து சுதாரித்து ஓடி அப்படியே தனது கரங்களில் ஏந்தி னாள். சற்று தடுமாறி அம்மிக்கருகில் கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி மீது அவள் விழுந்தாலும் அவனைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டாள். பக்கத்தில் கைப்பந்து விழுந்து கிடந்தது‌. கோபுவும் அலறியபடி அவர்கள் அருகில் ஓடி வந்தான்.  அம்மாவைத் தொட்டுத் தூக்க முயன்றான். அவளும்  மூடிய கண்களைத் திறந்து தினேஷைப் பார்த்தாள். “கண்ணு உனக்கு ஒன்னும் ஆகலையே” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. இல்லை என்று தலையசைத்த தினேஷ் அவளிடமிருந்து விடுபட மனமின்றி அரவணைப்பில் கட்டுண்டிருந்தான். அடுத்த நொடியே அவளது வீட்டு வழியாக தினே ஷின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் ஓடி வந்து பார்த்தனர். குப்பு அவர்களைப் பார்த்ததும் தினேஷைத் தூக்கியபடி எழுந்தாள்.

தினேஷின் அம்மா மங்கை தினேஷை அவளி டமிருந்து பிடுங்க முயலவும் குப்பு மங்கையிடம் தினேஷைக் கொடுக்க முயலும்போது அவன் குப்புவை அணைத்திருந்த கரங்களை விடவில்லை. “கண்ணு அண்ணன் சுரேஷ் சொல்லிக்கிட்டி ருக்கும்போதே பந்தப் பிடிக்க பின்னாடியே வந்து  விழுந்தியாமேடா, ஏண்டா இப்பிடிப் பண்ணிட் டியேடா” என்று மங்கையும் அழுதபடி நின்றாள். கூட  நின்றிருந்த சுரேஷ், குப்புவையும் அவளைக் கட்டிக்  கொண்டிருந்த தினேஷையுமே பார்த்துக் கொண்டி ருந்தான். “சுரேஷ், தினேஷ் மாடியிலிருந்து கீழே விழும்போது அலறல் சத்தம் கேட்டு அம்மா அப்ப டியே பிடிச்சி அணைச்சிக்கிட்டாங்க. கொஞ்சம் தவறி  ஜல்லி மேல விழுந்துட்டாங்க. அவங்களுக்குத் தான்  முதுகுல சிராய்ப்பு” என்று சொல்லவும் அதைப் பார்க்க  தினேஷ் அவனாகவே தன்னை விடுவித்துக் கொண்டு,  “என்னாச்சி முதுக கொஞ்சம் காட்டுங்கம்மா”  என்ற படி குப்புவை நெருங்கினான் தினேஷ். சுரேஷும் கோபு வும்கூட. குப்புவின் முதுகு ஜல்லியில் தாங்கியதில் சாய்ந்த அவளது ரவிக்கை பொத்தல் பொத்தலாகி ஆங்காங்கே ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உச்சுக்  கொட்டினார்கள் தினேஷும் சுரேஷும். மங்கையும் துரையும் நெருங்கி அவர்களும் உச்சுக் கொட்டி னார்கள். “ஏம்மா இந்த ஜல்லிங்க இங்க கெடக்கு” என்றார்  துரை.

“என் வீட்டுக்காரர் இந்தத் தெருவுல நம்ம வீடு  மட்டுந்தான் கூரை வீடா இருக்கு. நாமளும் சின்ன மெத்தை வீடா கட்டலாம்னு கையில பணம் கிடைக்கும்  போது ஒவ்வொன்னா வாங்கலாம்னு இந்த ஜல்லி யத்தான் மொதல்ல வாங்கனாரு. அடுத்த வாரமே  விபத்துல செத்துப் போயிட்டாரு” என்றபடி முந்தானை யை வாயில் வைத்துத் தலை குனிந்தாள். துரைக்கும் மங்கைக்கும் சங்கடமாகிவிட்டது. சாவன்று கூட அவர்கள் வீட்டுக்கு வந்து விசாரிக்கவில்லை. “இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. நான் ஹை ஸ்கூல்  கிரவுண்ட்ல விளையாடப் போறேன். உங்க கூட சேர்ந்து  விளையாடலாம்னு ஆசையா இருக்கு. அங்க தரை யில் தான் விளையாடப்போறம். அங்கெல்லாம் எந்த  ஆபத்தும் இல்லை. வர்றீங்களா தினேஷ், சுரேஷ்”  என்றபடி தினேஷையும் சுரேஷையும் மங்கையையும் துரையையும் மாறி மாறிப் பார்த்தான் கோபு. குப்பு அம்மிக்கல்லில் அரைத்த துவையலை வழித்துக் கிண்ணத்தில் போட்டு தட்டில் கஞ்சியை ஊற்றிக் கொண்டிருந்தாள். “நாங்க கட்டாயம் வரோம். அரை மணி நேரத்தில்  ரெடியா இரு கோபு.” என்ற தினேஷ் குப்புவை நெருங்கி, “அம்மா என்னாலதான உங்களுக்கு ஜாக்கெட் கிழிந்து அடிபட்டு ரத்தம் கூட வருது. சாரிம்மா” என்றபடி குப்புவையே பார்த்தான். சிறிது நேரத்துக்கு முன்பு வெளியே சென்றிருந்த துரை கையில் ஜெல்லுடன் வந்தார். “குப்பு, முதுக நல்லா கழுவிட்டு இந்த ஜெல்ல  தடவும்மா. சரியாயிடும்” என்றார் கண் கலங்கியபடி. மங்கை தினேஷையும் சுரேஷையும் அழைத்து கோபுவின் கரங்களுடன் பற்றி, “இனிமே நீங்க மூனு பேரும் ஒன்னா விளை யாடுங்க.” என்றாள். “ரொம்ப நன்றிங்க” என்றான் கோபு. குப்புவைப் பார்த்துக் கலங்கிய மங்கை அவளது கரங்களைப் பற்றினாள். சொல்ல வார்த்தைகள் வரவில்லை.