tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

269 பயனாளிகளுக்கு  கலைஞர் கனவு இல்ல வேலைக்கான உத்தரவு வழங்கல்

கும்பகோணம், ஏப்.19-   தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சியில் உள்ள 269 பயனாளிகளுக்கு கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு. பாலகணேஷ் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் ஆகியோர் 269 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல வேலை உத்தரவை வழங்கினர்.

சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாபநாசம், ஏப்.19-  பாபநாசம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் இயங்கும் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  பாபநாசம் நீதிமன்ற நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கிப் பேசினார். அவர் பேசும்போது, நிலுவையில் உள்ள உங்களது வழக்கினை நேரடியாகவோ, வழக்கறிஞர் மூலமோ சமரச மையத்திற்கு அனுப்பக் கூறலாம். சமரச மையத்தில் பயிற்சிப் பெற்ற சமரசர்கள், சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக உங்களை வழிநடத்துவர். சமரசர் முன்னிலையில், நீங்களே எதிர்த் தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம். இதில் உங்கள் வழக்கறிஞரும் பங்கேற்று உங்களுக்கு உதவலாம். இந்த செயல்பாடு உங்களது வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. சமரசம் ஏற்படவில்லை என்றால், நீங்கள் உங்கள் வழக்கை நீதிமன்றத்தில் தொடரலாம். மேலும், இதுகுறித்த விவரங்களுக்கு வட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தை அணுகிப் பயன்பெறலாம் என்றார். இதில் தலைமை எழுத்தர் மகாலட்சுமி, வழக்கறிஞர்கள் கம்பன், விஜயகுமார், இளையராஜா, பாஸ்கர் உட்பட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர், தஞ்சாவூர் சித்தார்த்தன், வேளாண் அலுவலர் தாரா, வேளாண் உதவி அலுவலர் அனுசுபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கருப்பு கவுனி நெல் அதிகபட்சம் கிலோ ஒன்றிற்கு ரூ.65, குறைந்தபட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ.57 என மொத்தம் ரூ.9 லட்சத்திற்கு விற்பனை நடந்தது.

கும்பகோணத்தில் காஷ்மீர் நுழைவு  வாயிலுடன் பிரம்மாண்ட பொருட்காட்சி

கல்யாணசுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட் கண்காட்சி நிறுவனம் நடத்தும் ஹோம் லிங்க்ஸ் பொருட்காட்சியை, கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் அமீன் பள்ளி மைதானத்தில் கல்யாணசுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார். கூலிங் சம்மர் எனும் விதமாக, காஷ்மீரை கொண்டு குளுகுளு நுழைவுவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்கான அணிகலன்கள், காலணிகள் மற்றும் பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க அனைத்து வகையான ராட்டினங்களும், கரும்புச்சாறு, மதுரை புகழ் ஜிகர்தண்டா, ஐஸ்கிரீம், ஊட்டி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பானிபூரி, பேல் பூரி உள்ளிட்ட உணவு கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு முஸ்லிம் கல்வி சங்க தலைவர் முகமது இக்பால் தலைமை தாங்கினார். ஹோம்லிங்ஸ் நிர்வாக இயக்குனர்கள் முகமது அப்பாஸ்,ஹக்கீம், சாதிக் பாட்சா ஆகியோர் வரவேற்றனர். பொருட்காட்சியை கல்யாணசுந்தரம் எம்பி காஷ்மீர் பனிமலை அரங்கத்தை அன்பழகன் எம்எல்ஏ, பொழுதுபோக்கு அம்சங்களை துணை மேயர் சுப தமிழழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தினமும் மாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி, கோடை காலத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

திமுக எம்.பி. கனிமொழி குறித்து  தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவர் கைது

புதுக்கோட்டை, ஏப்.19-  திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி, சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை, புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காட்டுநாவலைச் சேர்ந்தவர் மு. தவசுமணி. இவர், புதுக்கோட்டை இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையில் கடந்த ஏப்.12 ஆம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், ‘வெற்றிபெறுவோம்’ என்ற கட்செவி அஞ்சல் குழுவில் (வாட்ஸ்ஆப்) தூத்துக்குடியைச் சேர்ந்த அரசன் ராமச்சந்திரன் என்பவர், திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி ஆடியோ ஒன்றை கடந்த ஏப். 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தார். இதுகுறித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்திய இணையவழிக் குற்றத் தடுப்புப்  பிரிவு காவல்துறையினர், தூத்துக்குடியைச் சேர்ந்த அரசன் ராமச்சந்திரன் நாடார் என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு பகுதியில், ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் நித்யா மேற்பார்வையில், ஆய்வாளர் முருகானந்தம், உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பாப்பாநாடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த, ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்(37) என்பவரைப் பிடித்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பாப்பாநாடு, சோழகன் குடிக்காடு, ஆம்பலாப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காகவும், மீன் பண்ணைகளுக்கு விற்பதற்காகவும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும், அவர் ரேஷன் அரிசி வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவினர் செந்திலின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் செந்திலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.