மதுரை:
பொதுத்துறைகளை விற்பதில் தொடங்கி,மக்கள் விரோத, விவசாயிகள் விரோத சட்டங் களை நிறைவேற்றுவது, பெண்கள் மீதான வன்முறை, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் மோடிஅரசு, மக்களை திசை திருப்பி குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டபெண்கள், குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு ஆறு மாதத்தில் தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று மதுரை மாவட்டம்செல்லம்பட்டியில் ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சகலகலா நடிகர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், “உசிலம்பட்டி தாலுகாவில் ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகமாக நடந்தது. மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் தலையீடு காரணமாக அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்போராட்டங்களை மதுரை மாவட்டத்தில் நடத்திவருகிறது..உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில்,சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக் கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்துமோடி ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. பெண்கள் மீதான குற்றங்களை தடுப்பதில் மத்திய அரசுக்கு போதிய கவனம் இல்லை. எந்தத் துறையிலும் வளர்ச்சி காணாத இந்தியாவில் குறைந்தபட்சம் பெண்கள் நலனிலாவது மோடி அரசு அக்கறை காட்ட வேண்டும். பிரதமர் மோடி ஒரு “சகலகலா நடிகர்” அந்த நடிப்பை உத்தரப்பிரதேச சம்பவத்திலும் காட்ட அவர் தவறவில்லை. உத்தரப்பிரதேச காவல்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது” என்றார்.
பி.சுகந்தி
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் பி.சுகந்தி பேசுகையில், “கொரோனா காலத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைஅதிகரித்துள்ளது என்பதை மகளிர் நல ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சனையில் தமிழகம் மூன்றாவது இடத்தில்உள்ளது. எடப்பாடி அரசு பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்கள் வெகுவாககுறைந்துவிட்டது. ஆனால் அதே காலத்தில் பெண்கள் மீதான வன்முறையும், தாக்குதலும் அதிகரித்துள்ளது என காவல்துறை உயரதிகாரி ரவி கூறியுள்ளதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஆறு மாத காலத்தில் பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதல் குறித்து தமிழக அரசு முழுமையான அறிக்கை வெளியிட வேண்டும்” என்றார்.மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசுகையில், மதுரை மாவட்டத்தில மட்டும் கடந்த ஆறு மாதத்தில் 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்களை, சிறுமிகளை சந்திக்கச் செல்லும் காவலர்கள் சீருடையில் செல்லக்கூடாது என்ற விதிமதுரை மாவட்டத்தில் மீறப்படுகிறது. மாவட்ட காவல்துறை இது குறித்து தங்களது சக அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும். தமிழக அரசின் சட்டங்கள் மூலம் மட்டும் பெண்கள் மீதான வன்முறையை தடுத்துவிடவோ, குறைத்துவிடவோ முடியாது. பெண்களிடம் விழிப்புணர்வு அவசியம், விழிப்புணர்வை உண்டாக்கி வரும் மாதர் சங்கத்தில் பெண்கள் இணைந்து அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டுமென்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச்செயலாளர் செ.முத்துராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள்க.பிரேமலதா, செ.முத்துப்பாண்டி, விஜயா,செல்லம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் சிவனம்மாள் உட்பட 350 பேர் கலந்துகொண்டனர்.
மதுரை மாநகர்
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன் கொடுமையால் சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து மதுரை மீனாம்பாள்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழுஉறுப்பினர் எஸ்.சரண் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா,எம்.பாலசுப்பிரமணியம், பகுதி செயலாளர் ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பினர் கே. அலாவுதீன், கணேசன், முத்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஸ்வீட் ராஜா, புகழேந்தி, சிதம்பரம், காங்கிரஸ் சார்பில் நீதி ராஜா, சுந்தர், பால்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.