கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் செவ்வாயன்று போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரயிலடி அருகில், மாவட்டத் தலைவர் ஏ.சின்னையன் தலைமையில் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் உரையாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பாளர் என்.குருசாமி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் டி.எஸ்.மூர்த்தி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்தராஜ் ஆகியோர் உரையாற்றினர்.