கடலூர், டிச. 30- கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செயல்படாமல் இருக்கும் தொடர் சுடு சூளை (செராமிக் ஆலை) குறித்த தகவலை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, சூளையை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி தெரிவித்தார். விருத்தாசலத்தில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட அரசு தொடர் சுடு சூளை முறையாக செயல்பட வில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடிக்கிடக்கும் இந்த ஆலையை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அங்குள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் விருத்தாசலத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி, தொடர் சுடு சூளையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தொடர் சுடு சூளை, செராமிக் தொழிற்பேட்டையின் நிலைகுறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விருத்தாசலத்தில் உள்ள செராமிக் தொழிற்பேட்டையும் சுடு சூளையும் 5 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியான தொடர் சுடு சூளை தற்போது மூடிக் கிடக்கிறது. மூடப்பட்டி ருக்கும் தொழில்சாலைகளை சிலர் ஆக்கிரமித்து தொழில் செய்து வருகின்றனர். இந்தத் தொழிற்சாலையை திறப்பதற்கு அரசு ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும், அதி காரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். உடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், வட்டச் செயலர் அசோகன், வழக்கறிஞர் சந்திரசேகரன், மதிமுக நிர்வாகி சவுந்தர்ராஜன், இந்திய குடியரசுக் கட்சி நிர்வாகி மங்காபிள்ளை மற்றும் செராமிக் தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் இருந்தனர்.