tamilnadu

img

அரசியல் சட்டம் பற்றி பொது அறிவு பெற உதவும் ஒரு செறிவான நூல் - வே.மீனாட்சி சுந்தரம்

இந்திய அரசியல் நிர்ணய சட்டம் இல்லை என்றால் அது என்ன? (constitution Of India Is not what it is?) நீதியரசர் டாக்டர் ஏ.கே. ராஜன்  ஆங்கிலத்தில் எழுதிய ஒரு புத்தகத்தை அண்மையில் படிக்க நேர்ந்தது. சட்ட நுண்ணறிவு தேவையில்லாத என் போன்ற பாமரனுக்கும் அரசியல்  சட்டம் பற்றிய பொது அறிவு அவசியம் என்பதை  உணர்ந்தேன். அரசியல் சட்ட நுண்ணறி வைப் பெற விவாதங்கள் அவசியமாகிறது என்ற உண்மையையும் உணர்ந்தேன். புத்த கத்தின் தலைப்பே வித்தியாசமாகவும், இன்றைய நிலவரத்தைக் குத்திக் காட்டு வது போலவும் இருப்பதாக எனக்குப் பட்டது. நமது நாட்டில் ஆளுவோருக்கோ, சட்டமியற்ற அதிகாரம் படைத்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ இப்படி ஒரு சட்டம் இருக்கிற உணர்வில்லா மலேயே நடப்பதைக் காண்கிறோம். உச்ச  நீதிமன்ற நீதிபதிகளே அரசியல் சட்டத்தில் வரும் கலைச் சொற்களை அவரவர் புரிந்து கொண்ட விதத்தில் வைத்து தீர்ப்பு எழுதுவ தையும் காண்கிறோம். அதைவிட இந்தி யாவை ஆளுவதற்கு அர்த்த சாஸ்திரம் போதும். படித்த மக்களின் வாக்கெடுப்பில் உருவான இந்திய அரசியல் சட்டம் தேவை இல்லை என்று கருதும் கும்பல் கையில் அரசியல் சட்டம் படாதபாடுபடுவதைப் பார்க்கிறபோது வாக்காளர்களுக்கு அந்த சட்டம் பற்றிய பொது அறிவு தேவை என்பதை இதை படிக்கிற வாசகர் நிச்சயம் உணர்வார்.

இந்தப் புத்தகம், ஊடகங்கள் சூடாக விவாதிக்கிற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை, மற்றும் பாமரனைப் பொது நல வழக்கு தொடுக்க உச்ச நீதிமன்றப் படிகளை ஏறவைப்பவைகளில் மிகவும் சூடான   13 சட்ட பிரச்சனைகளைத் தேர்வு செய்து விளக்குகிறது.  அது தவிர அரசியல் சட்டத்தில் வரும் கலைச் சொற்களின் பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள் 23 தலைப்புகளில் புரியும் படியும்  சுவாரஸ்ய மாகவும் எழுதப்பட்டுள்ளன. தொடக்கமே அரசியல் நிர்ணய சட்டத்தைப் பற்றி சட்ட நிபுணர்களிடையே நிலவும் ஒரு கருத்தை முன்வைக்கிறது (constitution is not what it is it is what judges say it is)  “அரசியல்  சட்டத்தில் இருப்ப தல்ல, நீதிபதிகள் சொல்வதுதான் சட்டம்”  இந்த வாசகம் பற்றிய  சுவாரசியமான அமெரிக்க வரலாற்றுப் பின்னணியோடு விளக்குகிறது. அத்துடன் நிற்கவில்லை. அப்படியெனில் நீதிபதிகள் சொல்வதுதான் சட்டமா என்றால் இல்லை என்பதையும் விளக்குகிறது. இதனை விளக்க புகழ் பெற்ற நீதியரசர் கிருஷ்ணய்யர் கூறியதை யும் பல வருடங்கள் கழித்து பின்னர் உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்புகள் சட்ட அந்தஸ்து பெறாது என்று மறுத்துக் கூறியதையும் சுவா ரசியமான வரலாற்றுப் பின்னணியோடு இந்த புத்தகம் விளக்குகிறது. கிருஷ்ணய்ய ரின் ஆங்கிலப் புலமையையும்  அதனைத் தோண்டி எடுத்து இந்தப் புத்தகத்தில் எழுதி யுள்ள நீதியரசரின் பரந்துபட்ட ஞானத்தை யும் வியக்காமல் இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியாது. 

பிரிட்டன்  நாடாளுமன்ற சபாநாயகர்  குற்றம் செய்த ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கலாம்;  விசாரிக்கலாம்;  தண்டனை வழங்கலாம். அதில் எந்த மட்டத்திலும் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கோ, சட்ட மன்றத்திற்கோ இவ்வாறு செய்ய நமது அரசியல்  சட்டம் அனுமதிக்கவில்லை என்ற உச்சநீதிமன்ற முழுபெஞ்ச் தீர்ப்பு பற்றிய விவரம், அதன் அரசியல் பின்னணி ஆகிய வற்றை விளக்குகிறது.  பொதுவாக இந்திய அரசியல் தலைவர்களின் எல்லையற்ற அதி காரப் பேராசையை பாமரர்களும் உணர இந்த விளக்கம் நமக்கு உதவுகிறது. ஜன நாயகம் தழைக்க அரசிற்கும், உச்ச நீதி மன்றத்திற்கும் அதிகார வரம்புகள் உள்ளன.  அதே வேளையில் இதனை மீறுகிற போக்கு களும் இப்புத்தகத்தில் வாசகர்களை ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.  ஒன்றிய அரசு உருவாக்கும் பிரச்சனை களாக இருக்கும், ஒன்றிய - மாநில அரசு களின் அதிகாரப் பட்டியல், குடிஉரிமை, வசிக்கும் உரிமை,  பிற்படுத்தபட்ட சாதி எது?, கீரிமிலேயர் என்றால் என்ன?, கட்சித் தாவல் தடைச் சட்டம்,  ஆளுநரின் அதிகாரம்,  நீட் திணிப்பு ஆகியவை பற்றியும் சட்ட நுண்ணறிவைப்  பெறுகிற முறையில் இந்நூல் விளக்குகிறது. 

சட்டம் படிக்கும் மாணவர்களின், புரித லுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் பொதுமக்களின் சட்ட பொது அறிவிற்கும் உதவுகிற முறையில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும் பாமர வாசகன் என்ற முறை யில் சில ஐயங்கள் எழுகின்றன. கல்வி ஆரோக்கியம், வேலை, வீடு இவைகளை அடிப்படை உரிமை பட்டியலில் இந்திய  அரசியல் சட்டம் சேர்க்கவில்லையே ஏன்? அதற்கேற்ப திருத்தம் செய்ய நாடாளு மன்றம் முன் வரவில்லையே ஏன்?   மக்கள் உருவாக்கிய அரசியல்  சட்டத்திற்கு திருத்தம் செய்யும் உரிமை மக்களிடம் இல்லாமல் போனதால் ஏற்பட்ட பாதகங்க ளில் ஒன்றான  ஒன்றிய அரசின் அதிகார குவியல் பற்றி விவாதித்திருக்கலாமே! அரசியல்  சட்ட திருத்தங்களில் பல மக்கள் விரும்புகிற அரசை உருவாக்கும் உரிமை மறுக்கப்பட்டு அரசின் விருப்பப்படிதான் மக்கள் வாழ முடியும் என்ற நிலைக்குக் கொண்டுவந்த திருத்தங்கள்  பற்றி இப்புத்தகம் பேசியிருக்கலாம். இதெல்லாம் விடுபட்டது;  குறையாகப்பட்டது. ஆனாலும் சட்டத்தைப் படிக்க மோடியின் பிரம்பு  நம்மைத்  துரத்துகிற வேளையில் பொது அறிவு பெறவும் சட்டத்தை எப்படி படிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வ தற்கும் இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.