மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்த அறைக்குள் தூக்கத்திற்கும் அவளுக்கும் இடையே மாபெரும் கலவரம் நடந்து கொண்டிருந்தது.
“தொப்புனு” ஒரு சத்தம் ஏதோ கனத்த பொருள் ஒன்று நீரில் விழுவது போல் இருந்தது.
அவள் திடுக்கிட்டு எழுந்தாள்
இருள் நிறைந்த அந்த அறைக்குள் எங்கோ தூரத்தில் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கின் வெளிச்சத்தால் தாழிட்ட கதவை திறந்தாள்.
அறையை விட்டு வெளியே வந்தவள் வரவேற்பறையில் உள்ள கடிகாரத்தை பார்த்தாள் சரியாக அதிகாலை இரண்டு மணி.
சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள் வீட்டின் பின்புற கதவை திறந்து பார்த்தாள் அவளுக்கு மாபெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
அவள் கண்களால் அவைகளை அவளால் நம்ப முடியவில்லை.
மழையின் சாரல் அவள் மீது பட இருள் நிறைந்த அந்த நேரத்தில் மின்னலின் வெளிச்சத்தில் வீட்டின் பின்புறத்தில் அமைந்திருந்த சுவரானது அடியோடு சாய்ந்து கிடந்ததைக் கண்டாள்....
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை செய்வதறியாது திகைத்திருந்தவள் புறவாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து தலை சாய்த்துக் கொண்டாள்.
அவர்களுக்கிடையே நேர்ந்த கலவரத்தில் அவள் தோற்றுப்போனாள் அவளின் இமைகள் சற்றும் இமைக்காமலே இருந்தது விடியும் வரை....
வசீகரமான தோற்றம் இல்லாவிட்டாலும், அவளது சிறிய கண்களும், மிக கச்சிதமான உடல் வாகும், நேர்த்தியாக வரையப்பட்டதுப்போல் இருக்கும் அவளது உதடுகளும் தனி அழகுதான்.மென்னையானவள், ஆனால் கொஞ்சம் கோவக்காரி.. தோட்டம் அமைப்பதில் அதிக ஈடுபாடு இருந்து வந்ததால் அவளுக்குத் தேவையான காய்கறிச் செடிகளை அவள் தோட்டத்திலேயே பராமரித்து வந்தாள்...
விடிந்தது....
அக்கம் பக்கம் இருந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர் ஒருவர் கண்ணிலும் ஆறுதலான வார்த்தைகள் அவளுக்கென்று இல்லை .... முணுமுணுத்துக் கொண்டே கடந்து சென்றனர்...
அவளை கேள்விக்குறியின் அடையாளமாக கருதினர்.
ஆனால்,அவளின் புரிதல் சற்று வித்தியாசமாக இருந்தது.எதைப்பற்றியும் அவள்
கண்டு கொள்ளவில்லை....
அவள் மனதில் என்றும் இயற்கையின் பேராற்றலை நம்பிக்கையின் அடையாளமாகவே எப்பொழுதுமே உணர்ந்திருந்தாள்.
எழுந்தவள் சுவர் விழுந்த இடத்தில் கிடந்த கற்களை தூக்கி எறிந்துவிட்டு மண்ணைக் கிளறி அதில் வெண்டை,கத்திரி, மல்லி மற்றும் மிளகாய் விதைகளை விதைத்தாள்....
உயிரற்ற சுவர் இருந்த இடத்தில் இன்று அவள் விதைத்த விதைகள் அனைத்தும் மண்ணைப் பிளந்து கொண்டு வளர்ந்து இருந்தது...
அவளின் இந்த செயலைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தலைகுனிந்து சென்றனர்.
“கீச் கீச்” என்ற சத்தம் புற வாசலில் உள்ள எலுமிச்சமரத்தில் இருந்து வந்தது. இம்முறை அவளுக்கு அளவு கடந்த சந்தோஷம்.
முட்கள் நிறைந்த அந்த மரத்தின் நடுவே சிறு குருவிக் கூட்டுக்குள் இருந்த குருவிக் குஞ்சுகள் அவளிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டன..அதில் ஒன்று அவளைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்க அதற்கு அவள் உங்களை போல் நானும் என்னை சுற்றி இருக்கும் மனிதமுட்களுக்கிடையே எனக்கான வாழ்க்கையை எனக்கு பிடித்தாற்போல் அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினாள்.