புதுக்கோட்டை, ஆக.28- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இந்து மீனவரின் உடலை அடக்கம் செய்ததோடு நிதி உதவியும் அளித்த இஸ்லாமிய இளைஞர்கள் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.செல்வராஜ்(47). இவருக்கு மனைவி பரிமளாதேவி மற்றும் 4 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைத்துக் குழந்தைகளும் ஒன்று முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே சகோதரபுரம் வந்து தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி கோட்டைப்பட்டினத்தில் நேரிட்ட சாலை விபத்தில் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோட்டைப்பட்டினம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடற்கூராய்வு முடிக்கப்பட்ட நிலையில் அவரது சடலத்தை பெற்று அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் வரவில்லை. அந்த அளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக உறவினர்கள் யாரும் இல்லை. அடக்கம் செய்வதற்கு செலவுக்குகூட செல்வராஜ் குடும்பத்தினரிடம் வசதி இல்லை.
இதையறிந்த அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சடலத்தைப் பெற்று மணமேல்குடி பகுதியில் உள்ள பொது மயானத்தில் மறுநாள் அடக்கம் செய்தனர். அவர்களின் குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்து ரூ.30 ஆயிரம் நிதி திரட்டி குடும்பத்தினரிடம் செவ்வாய்க்கிழமையன்று அளித்துள்ளனர். இந்து முறைப்படி உடல் அடக்கம் இதுகுறித்து செல்வராஜ் உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரான ராஜாமுகமது கூறியபோது, “செல்வராஜ் குடும்பத்தினர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களோடு உறவினர்கள் யாரும் இங்கே இல்லை. மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரை எங்களில் ஒருவராக நினைத்து அவர் பின்பற்றி வந்த இந்துமத முறைப்படி அடக்கம் செய்தோம். மேலும்,அவர் குடும்பத்துக்கு தேவையான பிற உதவிகளை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்” என்றார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்து, முஸ்லீம் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காயும் பிஜேபி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கோட்டைப்பட்டினத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் செல்வராஜின் உடலை அடக்கம் செய்வதற்கோ, வேறு உதவிகள் செய்வதற்கோ முன்வரவில்லை. சகோதர பாசத்துடன் இஸ்லாமிய இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சியை அப்பகுதியில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகின்றனர்.