கோவி.பால.முருகு
தவழ்ந்து விழுந்து நகர்ந்து வருமென்
தங்க செல்லப் பாப்பா-நீ
கவலை கொள்ளத் தேவை இல்லை
காப்பேன் அக்கா பொறுப்பா!
தள்ளா டாமல் எழுந்து நடந்து
தையத் தக்கா போடு-உன்
கொள்ளை கொள்ளும் பார்வை தானே
கொடுக்கும் இன்ப வீடு!
பொக்கைப் பல்லைத் திறந்து உந்தன்
புன்ன கையைக் காட்டு!-மனம்
சொக்கும் மழலை மொழியைக் கொண்டு
சொர்க்க இன்பம் ஊட்டு!
அம்மா அப்பா உயிராய் காப்பார்
அழகுச் செல்லக் கண்ணே!-அண்ணன்
சும்மா இருக்க மாட்டான் உன்னைச்
சுற்றிக் காப்பான் முன்னே!
செல்வம் யாவினும் சிறந்த செல்வம்
சேயாய்த் தவழும் நீயே!-உன்
கள்ளம் கபடம் இல்லாத் தன்மை
காட்டும் நீதான் தாயே!
குழந்தை உள்ளம் எனக்கு வேண்டும்
கொண்டு வந்து கொடுப்பாய்!-நான்
மழலை யாக மாற வேண்டும்
மண்ணில் நேர்மைத் துடிப்பாய்!