tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாடு மதுரையில் நாளை துவங்குகிறது

மதுரை, மார்ச் 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23வது மாநாடு மதுரையில் மார்ச் 29 (இன்று) வரலாற்றுப் படக்காட்சி திறப்பு விழாவுடன் துவங்குகிறது. இம்மாநாடு அனைத்து வகைகளிலும் பெரும் எழுச்சி யுடன் வெற்றிபெறட்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான என்.சங்கரய்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.  கட்சியின் மாநில மாநாடு மதுரை இராஜா முத்தையா மன்றத்தில்  நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்திற்கு மறைந்த மகத்தான தலைவர் கோ.வீரய்யன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்கள் கே.வரதராசன், ஏ.அப்துல் வகாப், தே.இலட்சுமணன், கே.தங்கவேல் ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்ட நினைவரங்கில் இம்மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கெங்கு காணினும் செங்கொடிகள் வரவேற்கின்றன. மாநாட்டையொட்டி மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று கடைப்பிடிக்கப்பட்ட கொடி நாள் அன்று மதுரை மாநக ரிலும் புறநகரிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் 23 செங்கொடிகள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.  மாநாட்டு வரவேற்புக்குழு பல்வேறு உபகுழுக்களை அமைத்து அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து மாநாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. 

துவக்க நிகழ்வு

மாநாட்டின் துவக்க நிகழ்வாக மார்ச் 29 (இன்று) மாநாட்டு அரங்கில்  அமைந்துள்ள மறைந்த முதுபெரும் தலைவர் மைதிலி சிவராமன் நினை வரங்கில் செங்கொடி இயக்க வரலாற்றுப் படக்காட்சி மற்றும் முது பெரும் எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன் நினைவரங்கில் அமைந்துள்ள புத்தகக் காட்சி ஆகியவற்றை மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி திறந்து வைக்கிறார். 

நாளை துவக்க மாநாடு

இதைத்தொடர்ந்து மாநில மாநாட்டின் பொது மாநாடு மார்ச் 30 புதனன்று காலை 8 மணி அளவில் இசை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.  9 மணி அளவில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் செங்கொடி யை ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து 9.30 மணியளவில் நடைபெறும் பொது மாநாட்டிற்கு மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையேற்கிறார். வரவேற்புக்குழுத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., வரவேற்புரை நிகழ்த்துகிறார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அஞ்சலித் தீர்மானம் முன் மொழிகிறார். மாநாட்டைத் துவக்கி வைத்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றுகிறார். 

சங்கரய்யா வாழ்த்து - ஒளிபரப்பு

மாநாட்டின் அழைப்பிதழை  கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேக ரன் ஆகியோர் அளித்தனர். அப்போது, பாட்டாளி வர்க்கத்தின் குரலை ஓங்கி ஒலிக்கும் மதுரை மாநாடு அனைத்து வகைகளிலும் பெரும் வெற்றிபெறட்டும் என்று சங்கரய்யா வாழ்த்து தெரிவித்தார். சங்கரய்யாவின் வாழ்த்து செய்தி காணொலியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபொது மாநாட்டில் ஒளிபரப்பப்படுகிறது. 

பிரதிநிதிகள் மாநாடு

இதைத்தொடர்ந்து காலை 11 மணியளவில் பிரதிநிதிகள் மாநாடு  துவங்குகிறது. தலைமைக்குழு மற்றும் மாநாட்டுக்குழுக்கள் தேர்வுக்குப்  பின்னர் கட்சியின் அரசியல் - அமைப்பு - வேலை அறிக்கையை சமர்ப்பித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்று கிறார். இதைத்தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் துவங்குகிறது.

செந்தொண்டர்  அணிவகுப்பு - பொதுக்கூட்டம்

மார்ச் 30 (நாளை) மாலை 4 மணி அளவில் மதுரை காளவாசலிலிருந்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைக்க, பெரும் எழுச்சி யுடன் செந்தொண்டர் அணிவகுப்பு புறப்படுகிறது. அதன் நிறைவாக பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் அமைந்துள்ள தோழர்  என்.நன்மாறன் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

மாநாட்டு அழைப்பிதழை முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் ஆகியோர் அளித்தனர்.