மதுரை:
கேரள காவல்துறையினர் - மாவோயிஸ்ட்டுகள் இடையே நடைபெற்ற மோதலில் மணிவாசகம் என்ற மாவோயிஸ்ட்சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை அடையாளம் காணச் செல்வதற்கு அவரதுமற்றொரு சகோதரி லட்சுமிக்கு கேரள காவல்துறை அனுமதி வழங்க சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த அன்பரசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், ‘‘மணிவாசகத்தின் மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோர் திருச்சிராப்பள்ளி சிறையில் உள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண திருச்சிராப்பள்ளி சிறைக்காவலர்கள் அவர்களை அனுமதிக்க வில்லை. எனவே சந்திரா, கலாவிற்கு 30 நாட்கள் பரோல் வழங்கவும், மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அனுமதிக்க வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை அடையாளம் காணச் செல்வதற்கு அவரது மற்றொரு சகோதரி லட்சுமிக்கு கேரள காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோரின் பரோல் குறித்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.