tamilnadu

img

ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார்

சென்னை, ஏப்.10- ஆளுநர் மாளிகையான ராஜ்ப வனை ஆளுநர் ரவி அரசியல் பவனாக மாற்றிவருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் ஆளுநர்               ஆர்.என். ரவி தொடர்பாக  அரசின் தனித் தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார்.    அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர், “ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்தில் செயல்படு கிறார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற போதிலும் அந்தப் பதவிக்கு மரியாதை அளிக்க நாங்கள் தவறியதில்லை. தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டு அரசிற்கும் நண்பராக இருக்க ஆளுநர் தயாராக இல்லை. மக்களுக்கு வழி காட்டும் நண்பராக இருக்க வேண்டும்  என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. ஆளுநர் என்ற நிலை மாறி அரசியல் வாதியாக பேசுகிறார்.   சட்டமன்றத்தில் அரசியல் நோக்கத் திற்காக இடைஞ்சல் கொடுத்தால் அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது,  ஆளுநருக்கு கருத்து பதில் சொல்லி  அரசியல் மன்றமாக சட்டமன்றத்தை நான் மாற்ற விரும்பவில்லை”என்றார். ஒன்றிய அரசு- மாநில அரசு உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட ஓய்வு  பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா, “ஆளுநர் என்பவர் பற்றற்ற  அடையாளம் உள்ளவராக” இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதே  கருத்தை அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய பிரதமராக இருந்து வாஜ்பாய்  2000-ஆம் ஆண்டு நியமித்த  உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை  நீதிபதி வெங்கடாசலய்யா அறிக்கை யும் வலியுறுத்தியது.

அரசியல் சட்டத்தின் தந்தை என நாம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர், “ஆளு நர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல்  சட்ட ஆளுநராக செயல்பட வேண்டும்” என்பதை அரசியல் நிர்ணய  சபையிலேயே வலியுறுத்தியிருக் கிறார். கலைஞர் நியமித்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை  நீதிபதி தலைமையிலான “ராஜமன்னார் குழு” ஒன்றிய அரசு- மாநில அரசு  உறவுகள் பற்றி அளித்த அறிக்கையில்-  “ஆளுநர் பதவியை ஒழிக்க மிக உகந்த தருணம் இது” என்று பரிந்துரைத்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதே பேரவையில் அந்த அறிக்கை மற்றும் பரிந்துரைகள் 5 நாட்கள் விவாதிக்கப்பட்டு- மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வரலாறு.  2010-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதி கள் கொண்ட அமர்வு, “ஆளுநர் நியமிக்கப்பட்டு விட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாச மாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல” என்று “பி.பி.  சிங்கால்” வழக்கில் மிகத் தெளிவாகவே  வரையறுத்துள்ளது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் இருக்க வேண்டும்” என்று எத்தனையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் நமது ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு- தமிழ்நாட்டு மக்களுக்கு நண்பராக இருப்பதற்கு தயாராக  இல்லை என்பதை அவர் பதவியேற்றதி லிருந்து செய்யும் செயல்கள் ஒவ் வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன்  விவாதிக்க வேண்டுமே தவிர பொது வெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்த சட்ட மன்றத்தின் இறையாண்மையை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக் களை பொது வெளியில் பேசுகிறார். அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசு கிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளை சர்க்காரியா அறிக்கை வரையறுத்து கூறியுள்ளதோ அந்த தகுதிகளை எல்லாம் மறந்து விட்டுப் பேசுகிறார். அதுவும் குறிப்பாக பிரதமர்  தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் தில்லி செல்லும் போதோ தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்க மாக கொண்டிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை இந்த அவை யில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய  பிறகும் இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்பு தல் அளிக்க மறுத்தார். அதற்கு மேல்  மசோதா நிலுவையில் இருக்கிறது  என்றால் நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று பேசுகிறார். இந்த அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப் பிரிவு 200-ன் கீழ் “ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோ தாவை சட்டமன்றம் மீண்டும் நிறை வேற்றி அனுப்பிவிட்டால்- அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை விட வேறு வழி ஆளுநருக்கு இல்லை”  என்பதே தெளிவு.

அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று நான் கூற மாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க  வேண்டிய அரசியல் சட்ட விசுவா சத்தை “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே  இந்த அவையில் பதிவு செய்ய  விரும்புகிறேன். அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி  அரசின் அமைச்சரவை எடுத்த  கொள்கை முடிவுகளை பொது வெளி யில் பேசுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள “மதச்சார்பின்மைக்கு” எதிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களின்  உணர்வுகளை கொச்சைப்படுத்து கிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு குறுக்கே நிற்கிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை என்பது ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.மக்கள் கருத்து - வல்லுநர்கள் கருத்து- சட்டங்கள் - தீர்ப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் கருத்துகள் இவை அனைத்தும் சேர்ந்து தான் உருவாக்குகிறோம். இப்படிப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய சட்டத்தை தன்னுடைய சுயவிருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு காரணம் சொன் னால் இதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கும் மாநிலம் அல்ல என்று முதல்வர் கடுமை யாக சாடினார்.