தட்டச்சு தேர்வை கணினிக்கு மாற்றும் முடிவினை அரசு கைவிட வேண்டும்
தமிழ்நாடு வணிகவியல் பள்ளி சங்கம் ஆட்சியரிடம் மனு
திருச்சிராப்பள்ளி, ஜுன் 2- தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க மாநில தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், அதன் செயலாளர் சத்யமூர்த்தி, திருச்சி மாவட்ட தலைவர் முரளி, செயலாளர் ராம் திலக், பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். அதில், தமிழகத்தில் 4 லட்சம் மாணவ, மாணவிகள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு செல்கின்றனர். தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் தட்டச்சு பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு மற்றும் 2026 ஆண்டுகளில் நடைபெறும் தட்டச்சு தேர்வுகள் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக நடைபெறும் எனவும், 2027 ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 2000 தட்டச்சு பொறி மெக்கானிக்கல் மற்றும் அவர்களுடைய பத்தாயிரம் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, தட்டச்சு தேர்வினை ஐந்தாயிரம் அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பள்ளிகளின் 2 லட்சம் தட்டச்சு எந்திரங்கள் மூலமாக மட்டுமே தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எப்போதும் போல நடத்திட வேண்டுகிறோம். இது சம்பந்தமாக 28.10.2024 வெளியிடப்பட்ட அரசாணை எண்: 187-ஐ ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.