சென்னை, மே 26 - தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக பதவியேற்ற பிறகு அரசு விழாவில் பங்கேற்க முதன்முறையாக பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தார். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக கார் மூலம் ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்தார். விழா மேடை மற்றும் பிரதமர் வருகைதந்த வழி முழுவதும் பிரதமர் படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படம் மேடையில் கூட இடம்பெறவில்லை. இது ஒன்றிய அரசு விழாவா அல்லது பாஜக விழாவா என்ற சந்தேகம் எழும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. பாதுகாப்பும்-கெடுபிடிகளும் பிரதமரின் வருகையையொட்டி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற நேரு விளையாட்டரங்கம், சென்ட்ரல் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையம், விமான நிலையத்திற்கும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாநகரில் உள்ள தங்கும் விடுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. மேலும் இந்தப் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.