tamilnadu

img

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து தொடர்ந்து வலுவாக போராடுவோம்!

சென்னை, ஜன. 13- ஆளுநருக்கு எதிராக மட்டும் போராட்டம் நடத்தினால் போதாது, ஆர்.எஸ்.எஸ்.சின் சித் தாந்தத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராட வேண்டும் என சென்னை ஆர்ப்பாட்டத்தில்  ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்க மறுக்கும் ஆளுநர் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே அக்கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., தலைமையில் வெள்ளியன்று (ஜன. 13) நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்ற வரம்பை மீறியதோடு 8 கோடி மக்களை அவ மதித்துள்ளார். அரசியல் சட்ட வரம்புகளை மீறி அவரது நடவடிக்கைகள் உள்ளன. 1956ஆம் ஆண்டு விருதுநகரில் தேசபந்து மைதா னத்தில் சங்கரலிங்கனார், மலையாளம் பேசுப வர்களுக்குக் கேரளா, தெலுங்கு பேசுபவர்க ளுக்கு ஆந்திரா, கன்னடம் பேசுபவர்களுக்கு கர்நாடகா, தமிழ் பேசுபவர்களுக்கு தமிழ்நாடு என்ற மாநிலம் அமைந்த பிறகு ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயர் கூடாது என்று கால வரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைத் துவங்கினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த கே.டி.தங்கமணி, பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா ஆகியோர் சங்கரலிங்கனாரை சந்தித்து உங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராடுகிறோம்; நீங்கள் உண்ணா நிலையைக் கைவிடுங்கள் என்று வலியுறுத்தி னர். ஆனால் அதை அவர் ஏற்காமல் 76 நாட்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி மயக்கமுற்று மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்து வர்கள் அவர் பிழைக்க மாட்டார் என கூறி விட்டார்கள். தான் இறந்துவிடுவோம் என்று தெரிந்துகொண்ட சங்கரலிங்கனார் நான் இறந்து விட்டால் எனது உடலை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயில் எழுதி னார்.  

1962ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பி.ராம மூர்த்தி மெட்ராஸ் ஸ்டேட் என்பது கூடாது, தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காரணத்தினால் அதை பூபேஸ் குப்தா முன்மொழிந்து பேசினார். பேரறிஞர் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது பூபேஸ் குப்தா முன்மொழிந்திருக்கக் கூடிய மசோதாவை ஆதரிக்கிறேன் என்று தெரி வித்தார். ஆனால் அதை அன்றைய ஒன்றிய  அரசு ஏற்கவில்லை. 1969ஆம் ஆண்டு அண்ணா  தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் புதிய சட்டம் இயற்றி தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப் பட்டது. தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் உச்ச ரிக்காதது மட்டுமல்ல, அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்டவர்களின் பெயரைக் கூட அவர் படிக்க விரும்பவில்லை. சாவர்க்கர் பெய ரைத்தான் படிப்பீர்களா?  சட்டமன்றக் கூட்டத்தில் ஆத்திரமூட்டும் வகையில் ஆளுநர் நடந்து கொண்டால் கூட முதலமைச்சர் பொறுமையு டன் எழுந்து நாங்கள் தயாரித்து அளித்த அறிக் கையைத்தான் அவைக் குறிப்பில் சேர்க்க  வேண்டும்,  ஆளுநர் பேசியதை அவைக் குறிப் பிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சட்டம் கெட்டுவிடும்

ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதில் உள் நோக்கம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜக நியமனம் செய்யும் ஒவ்வொரு ஆளுநருக்கும் வேலைப் பிரிவினை கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள். மேற்கு வங்க ஆளுநராக இருந்து தற்போது குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கர், நாடாளுமன்றம் சட்டம் இயற்றினால், அது அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடியதாக இருந்தால் கூட உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்யக் கூடாது, தடை  விதிக்கக் கூடாது, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அரசியல் சட் டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லவர் கள் ஆட்சிக்கு வந்தால் இந்த அரசியல் சட்டம் நீடித்திருக்கும். கெட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் கெட்டுவிடும் என்று கூறினார். அதுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அமித்ஷா வும், மோடியும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பொய்யான தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோர் ஆளுநர் நடவடிக்கையைக் கண்டித்துப் போராடி வரும் சூழ்நிலையில், இரண்டு நாட்க ளுக்கு முன்பு திருவையாற்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சனாதனம் என்ற தத்து வத்தை இந்த தேசத்திற்குக் கொடுத்ததே தமிழ்நாடுதான் என்று முற்றிலும் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார். சனாதனம் கூடாது என வலுவான இயக்கம் நடத்திய தமிழ் நாட்டில் ஒருபோதும் சனாதனத்தைக் கொண்டு வர முடியாது. சனாதனம் மீண்டும் கொண்டு வரு வதற்குக் காரணம் தீண்டாமை, பெண் அடிமை முறை தொடர வேண்டும், மதச்சார்பற்ற நாடாக, கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடாக, ஜனநாயக நாடாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். எனவே ஆளுநருக்கு எதிராக மட்டும் போராட் டம் நடத்தினால் போதாது, ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, விசிக பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோரும் பேசினர்.