சென்னை, ஜன. 7 - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படத்திறப்பு விழா மற்றும் நினைவஞ்சலி நிகழ்வு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையுரையில், “மிக நெருக்கடியான காலகட்டத்தில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்று, இந்தியப் பொருளாதாரத்தை புதிய பாதையில் இட்டுச் சென்றவர் மன்மோகன் சிங். அவரது பொருளாதாரச் சீர்திருத்தங்களே இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற குறளுக்கு உதாரணமாக விளங்கியவர் மன்மோகன் சிங். உலகப் பொருளாதார நிபுணராகவும், பிரதமராகவும் பணியாற்றிய போதிலும் எளிமையும் அடக்கமும் குன்றாதவராக திகழ்ந்தார்” என்று புகழாரம் சூட்டினார். மேலும், ஆதிவாசிகள் நலனுக்காக மன்மோகன் சிங் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “2006-ஆம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எங்கள் தலைவர் பிருந்தா காரத் தலைமையில் நான் உள்பட நேரில் சந்தித்த போது, உடனடியாக நடவடிக்கை எடுத்து அதே ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி சட்டமாக்கினார். இந்தச் சட்டமே இன்று ஆதிவாசி மக்களின் நில உரிமைக்கு அடிப்படையாக உள்ளது” என்றார். நிகழ்வில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.