tamilnadu

img

உடல் நலம், மனமகிழ்வில் இந்தியா 130வது இடத்தில் உள்ளது

விருதுநகர், நவ.14- உடல்நலம் மற்றும் மனமகிழ்வு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 156 நாடுகளில் இந்தியா 130வது இடத்தில் உள்ளது என முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்தார். விருதுநகரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி அரங்கில் “திரை தவிர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: யாரும் கைபேசியை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு அடிமையாக வேண்டாம். பின்பு அதிலிருந்து வெளிவருவது கடினம். நாம், ஒரு புதிய நல்ல கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டும். கைபேசியை பார்த்துக் கொண்டிருக்காமல் வெளியில் வந்து நடைபயிற்சி, உடற்பயிற்சி, திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாய் தந்தையரிடம் மாற்றம் இருந்தால் குழந்தைகளி டமும் மாற்றம் வரும். ஒரு நாடு எப்படிப்பட்ட நாடு என்பதை, அந்நாட்டு மக்களின் பொழுதுபோக்கை பொறுத்து இருக்கிறது.   உடல் நலத்தோடு இருக்கிற மக்கள் மனமகிழ்வோடு உள்ளனர். அந்த வகையில் தற்போது 156 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் நாம் 130 வது இடத்தில் உள்ளோம். குழந்தைகள் தங்கள் மொழித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தாய்மொழியாம் தமிழ்மொழியை கற்க வேண்டும். அதுதான் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும். செல்போன் பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம். கடந்த செப்டம்பர் வரை சைபர் மோசடியில் சுமார் ரூ.1500 கோடி வரை மக்கள் பணம் பறிபோயுள்ளது. திரை  பார்ப்பது தொடர்நோய். அது மனநலத்தை பாதிக்கும். எனவே, நாம் திரை நேரத்தை குறைத்து, நல்ல விசயங்களில் நேரங்களை செலவழித்து, அதனை நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தந்து நல்லதொரு புதிய  சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஹிமான்சு மங்கள், துணை இயக்குநர்(காசநோய்) மரு.கே.பி.ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.