tamilnadu

img

நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் வழியை தொடருங்கள் - தினமலருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., வேண்டுகோள்!

நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் வழியை தொடருங்கள் என்று தினமலருக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

கீழடி அருங்காட்சியகக் கல்மண்டபத்தில் நான் பிறந்தநாள் கொண்டாடியதாக தினமலர் நாளிதழ் இன்று புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நான் அறிந்தவரை நாடாளுமன்ற உறுப்பினரான பின் முதன்முறையாக எனது புகைப்படத்தை அவ்விதழ் வெளியிட்டிருக்கிறது. அதற்கு நன்றி. 

மார்ச் மாதம் 17ஆம் தேதி பிற்பகலில் நியூஸ் 7 தொலைகாட்சி “கீழடி அருங்காட்சியகத்தின் முக்கியத்துவம்” குறித்த விரிவான நேர்காணலை என்னிடம் பதிவுசெய்தது. அந்த நேர்காணல் பதிவு முடிந்தவுடன் அத்தொலைகாட்சி நண்பர்கள் எனக்கு நினைவுப்பரிசாகப் புத்தகம் வழங்கினர். தேநீர், கேக் உள்ளிட்ட நொறுக்குத்தீனியை அனைவருக்கும் பகிர்ந்தனர்.

அருங்காட்சியகத்துக்கு வருகிறவர்கள், அங்குள்ள சிற்றுண்டி வளாகத்தில் தின்பொருட்களை வாங்கி ஓய்வாக அமர்ந்து சாப்பிடத்தான் அந்தக் கல்மண்டப இருக்கைப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் நியூஸ் 7 தொலைக்காட்சி நண்பர்கள் இந்தச் சிற்றுண்டிகளைப் பகிர்ந்தார்கள். அவர்கள் அன்று கொண்டுவந்த கேக், எனக்குப் புத்தகம் பரிசளிக்கும் நிகழ்வு ஆகியவற்றின் புகைப்படங்களை இங்கு பதிவிடுகிறேன்.

கீழடியின் ஒன்பதாம் கட்ட அகழாய்வினை தமிழக முதல்வர் அவர்கள் நாளை தொடக்கிவைக்கிறார். அதனைக் கொண்டாடும் விதமாக, தினமலர் நாளை இந்த கேக் படத்தை பிரசுரித்தால் கூடுதல் மகிழ்ச்சி. 

ஒன்றிய பாஜக அரசு எதுவும் இல்லை என சொல்லிக் கைவிட்டு வெளியேறிய இடத்தில், இன்று இந்திய வரலாற்றுத்துறையையே திரும்பிப்பார்க்கச்செய்யும் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

தமிழ்ச்சமூகத்தின் வரலாற்று வளத்தை நவீன கல்விப்புல ஆய்வின் வழியே உலகிற்கு எடுத்துச்சொல்லும் களமாக கீழடி அகழாய்வு மையங்கள் இருக்கின்றன.  இந்த அகழாய்வின் அடுத்தகட்ட பணி தொடங்கும் இந்நன்னாளை கேக் வெட்டியோ, இனிப்புகள் வழங்கியோ கொண்டாடுவோம். அதன் அடையாளமாக இந்த கேக் படத்தை தினமலர் வெளியிடும் என எதிர்பார்க்கிறேன்.

தினமலர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சங்க கால நாணயவியலில் நிபுணத்துவம் பெற்றவர்.  அவரின் வழியை தினமலர் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.