tamilnadu

img

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.1661.22 கோடி கடனுதவி பெற்று விவசாயிகள் பயன்

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.1661.22 கோடி கடனுதவி பெற்று விவசாயிகள் பயன்

மாவட்ட ஆட்சியர் தகவல்

கரூர், ஜுன் 27-  கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கடந்த 4 ஆண்டில் 1,90,475 விவசாயிகளுக்கு ரூ. 1661.22 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவிக்கையில், விவசாயிகளுக்கு வேளாண் பயிர் சாகுபடிக்காக இடுபொருட்கள் மற்றும் தேவையான உரங்கள் வாங்குவதற்காக கூட்டுறவுத்துறையின் சார்பில் குறுகிய கால பயிர்கடன் மற்றும் கால்நடைப் பராமரிப்பு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 85  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.   கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீடு ரூ.1099 கோடியில், தற்பொழுது 1,34,957 விவசாயிகளுக்கு ரூ.1138.36 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கடன் தொகைகள் அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கடனை விவசாயிகள் உரிய தவணைத் தேதியில் திருப்பி செலுத்தும்போது, விவசாயிகள் வட்டி செலுத்தத் தேவையில்லை என்பதும், அதற்குண்டான வட்டியை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.  மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.482.2 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 55,518 விவசாயிகளுக்கு ரூ.522.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,34,957 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.1138.36 கோடியும், கால்நடை பராமரிப்புக் கடனாக 55,518 விவசாயிகளுக்கு ரூ.522.86 கோடி கடன் என மொத்தம் இந்த இரண்டு வகையான திட்டங்களின் மூலம் 1,90,475 விவசாயிகளுக்கு ரூ.1661.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு, கடன் மனு சமர்ப்பித்து, பயிர்க் கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.