சேத்து பாசன வாய்க்காலை உடனடியாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை
பாபநாசம், ஜுன் 10- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, நரசிங்கமங்கலம் வழியாகச் செல்லும் வெண்ணாற்றிலிருந்து பிரியும் சேத்து பாசன வாய்க்கால் மூலம் காவலூர், நரியனூர், காட்டுக்குறிச்சி, மெலட்டூர், ரெங்கநாதபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பத்தாண்டுகளாக இந்த வாய்க்காலைத் தூர்வாராததால், ஆகாயத்தாமரை, நாணல் மண்டியுள்ளது. மேலும், இதில் கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது. வெண்ணாற்றில் தண்ணீர் வந்தாலும், நரசிங்கமங்கலம் சேத்துப் பாசன வாய்க்காலில் தண்ணீர் ஏறாததால் பாசனத்திற்கு பயன் இல்லாமல் போய் விடுகிறது. எனவே நரசிங்கமங்கலம் சேத்து பாசன வாய்க்காலை உடனடியாக தூர்வார அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.