உளுந்தூர்பேட்டை, டிச.20 - திருநாவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைபோன தங்க நகைகளை திரும்ப ஒப்படைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், ஐஐ 92 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2010 ஆம் ஆண்டு 493 ஏழை விவசாயிகள் அடகு வைத்திருந்த 1,790 சவரன் நகைகள் கொள்ளை போனது. அந்த நகைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. கூட்டுறவுதுறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் பலமுறை எழுத்து மூலமாக சமாதான கூட்டம் நடத்தி ஒப்பந்தங்கள் செய்தும் நகைகள் திருப்பி தரப்படவில்லை. இந்த நிலையில், திருடு போன நகைகளை இன்றைய மார்க்கெட் மதிப்பில் திரும்ப வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று(டிச.20) சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
தள்ளுமுள்ளு
முன்னதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மின்வாரிய அலுவலகம் முன்பிருந்து ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயகுமார் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, மூன்று இடங்களில் இரும்பு தடுப்புகளை அமைத்த காவல்துறையினர், போராட்டத்தை தடுக்க முயன்றனர். நகைகளை இழந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளையும் மீறி வங்கியின் வாசலை அடைந்து ஆவேசமாக முழக்கமிட்டனர். காவல்துறையின் அடக்குமுறையால் சிலர் காயமடைந்தனர். பின்னர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். இதில் கூட்டுறவு இணைப்பதிவாளர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகளுக்கு நகைகளை திரும்ப அளிப்பது தொடர்பாக பேசி முடிவு காணலாம் என்று உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழுமலை, வி.சாமிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.மோகன், ஏ.சக்தி, ஏ.தேவி, அய்யனார், பி.மணி மற்றும் எம்.வி.ஏழுமலை உள்ளிட்ட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
நகை திருடுபோன கவலையில் இறந்த விவசாயி
நகைகளை அடமானம் வைத்து பறிகொடுத்த ஈஸ்வரகண்டநல்லூர் விவசாயி அய்யனாரின் மனைவி ஜெகன்பிரியா (35) கூறுகையில், “நகைகளை அடகு வைத்து திருடுபோன தகவலை கேள்விப்பட்ட கவலையிலேயே எனது கணவர் இறந்து விட்டார். குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் முந்திரிக்கொட்டை உடைக்கும் வேலைக்கு சென்று வருகிறேன். எனது நகைகள் மீண்டும் கிடைக்குமா?’’ என்றும் கவலையுடன் கேட்டார். இதே போல், 37 வயதான கொ.வாசுகி என்ற பயனாளி, “கால்நடைகள் மேய்த்து எனது குழந்தைகளை பாதுகாக்கும் சூழலில் எனது நகைகளை அடகு வைத்து அது கொள்ளை போனதால் இதுவரை கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பல போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். 12 ஆண்டுகள் ஆகியும் இரண்டு ஆட்சிகளிலும் எங்களுக்கு நகைகள் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனையாக உள்ளது” என்று தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தினார்.