மே.27 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 27 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா கேட்டுக் கொண்டுள்ளார்.
மே.28 இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 28 புதன்கிழமை அன்று முற்பகல் 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா கேட்டுக் கொண்டுள்ளார்.
இளைஞரிடம் செல்போன் பறித்துச் சென்ற மூவர் கைது
தஞ்சாவூர், மே 22- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் பகுதியில் இளைஞரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போனும் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் அருகே, மாதாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளையராஜா(38) என்பவர், கடந்த 21 ஆம் தேதி நள்ளிரவு, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள், இளையராஜா வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல்நிலையத்தில் இளையராஜா புகார் செய்தார். இதன் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இளையராஜாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றவர்கள் வல்லம் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த கோபி என்கிற செல்வா (20), முகமது இப்ராஹிம் (24), சாரதி (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.