தோகைமலையில் காவிரி குடிநீர் கேட்டு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கரூர், ஏப்.28- கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் வெள்ளைப்பட்டி, வருந்திப்பட்டி, வெள்ளப்பட்டி, களத்து வீடு ஆகிய கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். குடிப்பதற்கு தகுதியற்ற உப்பு நீரை தற்போது குடித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று காவிரி குடிநீர் கொண்டு வருகின்றனர். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனைக் கண்டித்தும், வெள்ளைப் பட்டி, வருந்திப்பட்டி, வெள்ளப்பட்டி, களத்து வீடு ஆகிய கிராமங்களில் உடனடியாக காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோகை மலை ஒன்றியக் குழு சார்பில், தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தோகைமலை ஒன்றியத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ. சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர. நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் ஏ. பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் முனியப் பன், வெள்ளைபட்டி கிளைச் செயலாளர் வி. பழனிச்சாமி, கிளை செயலாளர் கே. ஆண்டி, வருந்திப்பட்டி பழனி, காந்திமதி, சிரும்பாயி, சுமதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.