tamilnadu

சட்டையை கழற்றி சாமி பெயரில் அடித்து உதைப்பதா? நெற்குப்பையில் விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்டையை கழற்றி சாமி பெயரில் அடித்து உதைப்பதா? நெற்குப்பையில் 

நெற்குப்பையில் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பட்டியலின மக்களிடம் கிராம பணம் ரூ.70 லட்சத்தை கணக்கு கேட்டதற்காக 70 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து சாமியின் பெயரில் அடித்து உதைத்துள்ளனர்.  இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெற்குப்பையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நெற்குப்பை பேரூராட்சியில் கடந்த 2003 - 2004 நிதியாண்டில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4,85,000 மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.  இந்த சமுதாயக்கூடத்தை கீழத்தெரு பகுதியில் உள்ள ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்ததாகவும், இந்த மக்களில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, இந்த மண்டபத்தின் சாவியை அவர்களின் இல்ல விழாவிற்கு தருவதற்கு, சிலர் மறுத்து வருவதாகவும், இவர்களிடம் திருவிழாவின் போது வரிகள் வாங்கப்படுவதில்லை என்றும், இவர்களின் சட்டையை கழற்றி காலில் விழுந்து சிலர் கும்பிட வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள், பலமுறை நெற்குப்பை காவல் நிலையத்திலும், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க  அதிகாரிகள் முன்வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் புதனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக சமுதாயக்கூட சாவியை பேரூராட்சி நிர்வாகம் கைப்பற்றி அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நடவடிக்கை எடுக்க மறுத்தால், அடுத்த கட்ட போராட்டமாக வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் எனவும் எச்சரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.  விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டத் தலைவர் வீரபாண்டி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சேதுராமன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாந்தி, சிங்கம்புணரி தாலுகா செயலாளர் காந்திமதி, மாவட்டக் குழு உறுப்பினர் மெய்யப்பன், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் மாதவன், சிபிஎம் திருப்பத்தூர் நகர செயலாளர் அமானுல்லா, பெருமாள், மாணிக்கம், சேகர், விவசாயிகள் சங்க நெற்குப்பை கிளை தலைவர் ராசு, செயலாளர் பிரபு, பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர்கள் விஜய், மணிகண்டன், ரஞ்சிதா, துணைச் செயலாளர்கள் நாகராஜன், சேக்கப்பன், மலர்விழி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.