tamilnadu

img

தமிழக பட்ஜெட்: சிறு, குறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள்!

சென்னை, மார்ச் 14- நடப்பாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 18ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் குறித்து சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் 23.13 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 119 தொழிற்பேட்டைகளும், 5 மகளிர் தொழில் பூங்காக்களும் உள்ளன. சுமார் 1.4 கோடி பேர் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகின்றனர். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் சுமார் 40 விழுக்காடு பங்களிப்பு செலுத்துகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், முதல்முறையாக வரும் 18ஆம் தேதி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகையே முடக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் முடங்கிப்போன சிறு குறு நிறுவனங்கள் மீண்டுவர எளிய முறையில் கடன் வசதி, மானிய விலையில் மின்சாரம், மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழில்துறையினர் முன் வைக்கின்றனர்.

விலை உயர்வு

இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் (சாடியா) ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணசாமி கூறுகையில், மூலப் பொருட்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது, அனைத்து சிறு, குறுந்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே உற்பத்தி செய்கிறது, பொருட்களின் விலையையும் நிர்ணயம் செய்து கொள்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 100 விழுக்காடு முதல் 200 விழுக்காட்டிற்கு மேல் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிறு குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியாமல் தத்தளிக்கின்றன. எனவே அரசே இந்த மூலப்பொருட்களை கொள்முதல் செய்து சலுகை விலையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

வட்டியில்லா கடன்

 மூலப்பொருட்கள் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். அதேபோல் மூல பொருட்களுக்காக வாங்கிய கடனுக்கும், ஓர் ஆண்டுக்கு வட்டி மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு உற்பத்தி செய்வதில் தடங்கல் இருக்காது. கடன் வாங்காத வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மானியமாக குறைந்தது ஒரு லட்சம் வழங்க ஒன்றிய அரசை மாநில அரசு நிர்பந்தப்படுத்த வேண்டும் அல்லது தமிழ்நாடு நிதி முதலீட்டு கழகம் மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆன்லைன் தளத்தை ஏற்படுத்துக

சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு போது மான சந்தை இல்லை. சில பெரிய நிறுவனங்களையே நம்பியுள்ளதால் அதன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இயங்க வேண்டியுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 8,000 பொருட்களை உற்பத்தி செய்கிறது. இதன் சந்தையை விரிவுபடுத்த தமிழ்நாட்டில், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளியே கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசுக்கென்றே புதிய ஆன்லைன் விற்பனை தளம்  ஒன்றை உருவாக்க வேண்டும். அவற்றுக்கு அகில இந்தியா அளவில் வாங்குவோரை ஈர்க்க  அரசே கால் சென்டர் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். இதன்மூலம் சிறு மற்றும்  குறுந்தொழில் பொருட்க ளுக்கு மிகப்பெரிய சந்தையை உருவாக்க முடியும். இதை சிட்கோ நிறு வனம் மூலம் நடைமுறைப் படுத்தலாம். தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லை என்ற தோற்றம் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது, எனவேதான் வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற  நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 75 லட்சம்  பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக் கிறார்கள், இவர்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 17,81,695 பேரும், 23 வயதிற்கு உட்பட்டவர்கள் 16,14,582 பேரும், இவர்களில் 10, 12, ஐடிஐ  மற்றும் டிப்ளமோ படித்த வர்களுக்கு சிறு குறுந் தொழிலில் பணிபுரிவதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சிறு, குறுந்தொழில் வளர்ச்சி பெறும். வேலையில்லா திண்டாட்டமும் குறையும்

வடிவமைத்தல்

சிட்கோ மூலமாக ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டை, மற்றும் தனியார் தொழிற்பேட்டை பெரும்பாலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ளது, அனைத்து தொழிற்பேட்டைகளிலும் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான இட வசதியை ஏற்படுத்தி, பயிற்சி அளிப்பதன் மூலம் தொழில் வளர்ச்சி மேம்படும், கோடை காலம் நெருங்கி வருவதால் அதிகரிக்கும் மின்தேவையை ஈடுகட்ட காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்க வேண்டும். தொழிற்பேட்டைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தனியாக துணை மின் நிலையம் அமைத்து, சிறு, குறுந்தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். இதன்மூலம் சிறு, குறுந்தொழில்களின் உற்பத்தியையும், வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்த முடியும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் கிருஷ்ணசாமி பட்டியலிட்டுள்ளார்.